அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் கம்பீர் அறிவித்த நிலையில், தனக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதை அவர் கோஹ்லிக்கு விட்டுக்கொடுத்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்(37) நேற்று முன் தினம் கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சிறந்த தொடக்க வீரராக களமிறங்கி பல சாதனைகளை படைத்த அவரது அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
எனினும், கனத்த இதயத்துடன் தான் விடைபெறுவதாக அவர் வீடியோ வெளியிட்டத்தைத் தொடர்ந்து, ரசிகர்கள் #GautamGambhir #ThankYouGambhir என்ற ஹேஷ்டேக் மூலம் அவருக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பினர்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கம்பீர் ஆட்டநாயகன் விருது பெற்றதை, கோஹ்லிக்கு விட்டுக்கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த இந்தப் போட்டியில், கம்பீர்-கோஹ்லி ஜோடி 316 ஓட்டங்கள் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்தது. இதில் கம்பீர் 150 ஓட்டங்களும், கோஹ்லி 107 ஓட்டங்களும் விளாசினர்.
போட்டி முடிந்த பின்னர் ஆட்டநாயகன் விருதுக்கு கம்பீர் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் அதனை வாங்க மறுத்து, ஒருநாள் போட்டியில் முதல் சதம் அடித்த கோஹ்லிக்கு பரிந்துரைத்தார். அதன்படி கோஹ்லிக்கு அந்த விருது அளிக்கப்பட்டது.