தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பிரதானி பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருப்பதாக விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுகின்றார். எனினும் இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக இறுதி யுத்தத்திற்குத் தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருக்கின்றார்.
எனவே இருவரின் கருத்தைப் பொறுத்தவரையில் யுத்தத்திற்கு தலைமை தாங்கியவரின் கருத்தினை ஏற்பதுவே பொருத்தமாக இருக்கும். அத்தோடு இவ்விடயம் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுணதீவில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை அடுத்து பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருப்பதாக கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து வெளியிட்டிருந்தார். இவ்விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.