இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் உமிழ்நீர் வழியாக தமது கணவர் எய்ட்ஸ் நோயை பரப்பியதாக மனைவி புகார் அளித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹோமியோபதி மருத்துவரான கணவருக்கு எதிராக புனே நகரத்து இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு குறித்த மருத்துவருடன் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.
ஆனால் அன்று தொடங்கி கணவரின் பெற்றோர் வரதட்சிணை தொடர்பாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குறித்த இளம்பெண் நோய்வாய்ப்பட்டுள்ளார். அப்போது மருத்துவரான கணவர் தங்களது குடியிருப்பில் வைத்து மருந்துடன் கலந்து எய்ட்ஸ் பாதித்தவரின் உமிழ்நீரை மனைவிக்கு அளித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த ஆண்டு துவக்கத்தில் குறித்த உடலில் ஏற்பட்ட திடீர் மாறுதலை அடுத்து சந்தேகத்தின் பேரில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார் குறித்த இளம்பெண்.
அப்போது அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் வெளியானதை அடுத்து தமக்கு விவாகரத்து வேண்டும் என அந்த மருத்துவர் நிர்பந்தித்துள்ளார்.
ஆனால் தமக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட காரணமே தமது மருத்துவ கணவர் தான் என அந்த இளம்பெண் வாதிட்டுள்ளார்.
இதனிடையே தனியார் மருத்துவமனை ஒன்றில் கணவன் மனைவி இருவரையும் பரிசோதித்ததில், இருவருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
ஆனால் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மனைவிக்கு மட்டுமே எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பொலிசார் தேட உள்ளனர்.






