கிளிநொச்சி பளை முகமாலைப் பகுதியில் தொடருந்து மோதி 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
சுழிபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் குணசீலன் என்பவரே தொடருந்து மோதி உயிரிழந்தவர் என பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த கடுகதி தொடருந்து முகமாலையை அண்மித்த போது, சாலையோரம் நின்ற இந்த நபர் திடீரென தண்டவாளத்தினுள் ஏறியபோது தொடருந்து மோதி, உடல் சின்னாபின்னாமாகியது என்று சம்பவத்தை நேரில் கண்ட தொடருந்துக் கடவைக் காவலாளி தெரிவித்துள்ளார்
சுழிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனக் கூறி கடந்த இரு தினங்களாக முகமாலை பேருந்து தரிப்பிடத்தில் தங்கியிருந்ததாகவும் முகமாலையில் உள்ள காணியைக் காட்டுவதற்கு ஒருவர் வரவேண்டுமெனக் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபர் வைத்திருந்த கைப்பையினுள் பணம், காணி உறுதி மற்றும் கடவுச்சீட்டு போன்றவை காணப்பட்டதெனவும் அவற்றைப் பளைப் பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.