சோகத்தில் முடிந்த கிறிஸ்துமஸ் பேரணி: பிரதமர் இரங்கல்

கனடாவில் கிறிஸ்துமஸ் பேரணியின்போது அலங்கார ஊர்தி ஒன்றில் சிக்கி சிறுமி ஒருத்தி உயிரிழந்ததால் பேரணி சோகத்தில் முடிந்தது.

கனடாவின் Nova Scotiaவில் ஆண்டுதோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் பேரணியின்போது நான்கு வயது சிறுமி ஒருத்தி அலங்கார ஊர்தி ஒன்றின் அடியில் சிக்கிக் கொண்டதையடுத்து உடனடியாக பேரணி நிறுத்தப்பட்டது.

பேரணியில் கலந்துகொண்ட மக்கள் இதனால் பேரதிர்ச்சிக்குள்ளானார்கள். உடனடியாக சிறுமியை மீட்க மருத்துவ உதவிக்குழுவினர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிய, அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.

சிறுமியின் இறப்பிற்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒரு தந்தையாக தனக்கு வார்த்தைகள் வரவில்லை என்று ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார்.

குழந்தையின் உயிரிழப்பிற்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள மேயரான Pam Moodம், எண்ணிப்பார்க்க இயலாத அளவிற்கு பெரிய இழப்பு இது என்று கூறியுள்ளதோடு, மொத்த சமுதாயமும் அந்த சிறுமியின் இறப்பிற்காக துயரத்தில் பங்கேற்பதிலும், ஒருவரையொருவர் தேற்றுவதிலும் தங்கள் நேரத்தை செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.