குமரி மாவட்டத்தில் நாகர் கோவில் உள்பட பல பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இதைத் அடுத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் காவல்துறையினருக்கு உத்தர விட்டுள்ளார். காவல்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா கும்பலை கைது செய்து வருகிறார்கள்.
வடசேரி காவல்துறை ஆய்வாளர் பெனட் சேவியர் தலைமையிலான காவல்துறையினர் வடசேரியில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் சந்தேகப்படும் படியாக அங்கு நின்று கொண்டிருந்தனர்.
காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் பெயர் கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த சபரி (20), செந்தில்குமார் (34), அருகுவிளையைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா (32) என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் நடத்திய சோதனையில் 2 ¼ கிலோ கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு பின்னணியில் இருக்கும் கஞ்சா கும்பல் பற்றியும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






