இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக எட்டு இலட்சத்து 3 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1042 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை அடுத்து வரும் நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல், மத்திய, வடமத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இன்று அதிகாலை முதல் கொழும்பில் பல பகுதிகளில் அடைமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் மழை காரணமாக பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.






