கள்ளக்காதலனுடன் சென்று நகை பறித்த இளம் பெண்…..

திருவனந்தபுரம் அருகே உள்ள மாவேலிக்கரை மற்றும் சுற்றுப்பகுதியில் சாலையில் நடந்துச் செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றது.

இது பற்றி போலீசாருக்கு நகை பறிக்கொடுத்தவர்கள் புகார் செய்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் இது போல நகையை பறி கொடுத்ததாக புகார் செய்ததால் நகை பறிக்கும் கும்பலை கைது செய்ய போலீசார் தீவிர வேட்டையில் இறங்கினார்கள்.

புகார் கூறியவர்கள் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு ஆணும், பெண்ணும் தங்களிடம் முகவரி கேட்பது போல நடித்து தங்கள் கவனத்தை திசை திருப்பி நகை பறித்து சென்றதாக கூறி இருந்தனர்.

நகை பறிப்பு சம்பவங்கள் அனைத்தும் இதே போல நடைபெற்று இருந்ததால் ஒரே கும்பல் தான் இந்த கைவரிசையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள். அந்த கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது மாவேலிக்கரை பகுதியில் ஒரு கண்காணிப்பு காமிராவில் நகை திருட்டு காட்சி பதிவாகி இருந்தது தெரிய வந்தது. வாகனத்தின் பதிவு எண் மூலம் போலீசார் விசாரணை நடத்திய போது அது போலி பதிவு எண் என்பது தெரிய வந்தது.

இதனால் அந்த கும்பல் போலீசார் கைகளில் சிக்காமல் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்தது. இந்த நிலையில் மாவேலிக்கரை கல்லூரி சாலையில் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த விஜூ(வயது33), மாவேலிக்கரைச் சேர்ந்த சுனிதா(36) என்பது தெரிய வந்தது.

சுனிதாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அவர் கூலி வேலைக்குச் சென்ற போது விஜூவுடன்பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் கணவரை பிரிந்து விஜூவுடன் தனியாக வீடு எடுத்து அவர் வசித்து வந்தார். தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்காக அவர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுனிதா வாகனத்தை ஓட்டிச் செல்ல பின்னால் அமர்ந்துச் செல்லும் விஜூ நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் அடிக்கடி தங்கள் வாகனத்தின் பதிவு எண்களையும், நிறத்தையும் மாற்றி கைவரிசையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.