இந்த ஆண்டு கர்நாடகா, கேரளாவில் அதிக அளவில் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதில் கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதேபோல், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் அதிக அளவில் தென்மேற்கு பருவமழை பெய்தல் இந்த ஆண்டு அரிசி உற்பத்தி அதிகரித்து உள்ளது.
மேலும் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, தமிழகத்துக்கு தேவையான நீர் வந்தடைந்தது. இதனால் தமிழகத்திலும் நெல் அறுவடை அதிகரித்தது.
இந்த நிலையில் கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து அதிகரித்ததால் தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் விற்கப்படும் 25 கிலோ மூட்டை அரிசி விலை ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்து, தமிழகத்தில் ரூ.700-க்கு விற்கப்பட்டு வந்த பொன்னி 25 கிலோ மூட்டை தற்போது ரூ.630 ஆகவும், ரூ.750-க்கு விற்கப்பட்ட கோ.51 பொன்னி 25 கிலோ மூட்டை தற்போது ரூ.570 ஆகவும், ரூ.900-க்கு விற்கப்பட்ட டீலெக்ஸ் பொன்னி மூட்டை தற்போது ரூ.800 ஆகவும் குறைந்துள்ளது.
இந்நிலையில், ரூ.1150-க்கு விற்கப்பட்ட ஆந்திரா ஸ்டீம் அரிசி (முதல் ரகம்) ரூ.1050 ஆகவும், ரூ.1000-க்கு விற்கப்பட்ட ஆந்திரா ஸ்டீம் அரிசி (இரண்டாவது ரகம்) ரூ.900 ஆகவும், ரூ.1250-க்கு விற்கப்பட்ட கர்நாடக ஸ்டீம் அரிசி (முதல் ரகம்) ரூ.1150 ஆகவும் குறைந்துள்ளது.