மேன்முறையீட்டு நீதிமன்றில் முதலமைச்சர்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையான முதலமைச்சர் விக்னேஸ்வரனை, எதிர்வரும் 18ம் திகதி மன்றில் முன்னிலையாகும்படி இன்று கட்டளை வழங்கப்பட்டது.

வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முதலமைச்சர், தனது அமைச்சரவையை சேர்ந்த கந்தையா சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோருடன் அன்றைய தினம் முன்னிலையாகுமாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்று இன்று கட்டளை வழங்கியது.

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தம்மை பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று உத்தரவிடக் கோரி, முன்னாள் மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான இடைக்காலக் கட்டளை கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டது.

சட்டப்படி பா.டெனீஸ்வரன் அமைச்சுப் பதவியில் நீடிப்பதால், அவரது அமைச்சுப் பதவிகளை வகிப்போர் அவற்றை விடுவிக்கவேண்டும் என்று நீதிமன்று இடைக்கால கட்டளை வழங்கியது.

நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜானக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த கட்டளையை வழங்கியது.

டெனீஸ்வரனின் துறைகளில், போக்குவரத்து அமைச்சு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் உள்ளது.

மீன்பிடி அமைச்சு, விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கந்தையா சிவநேசனிடம் உள்ளது.

வர்த்தக வாணிப அமைச்சு, மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல் – விநியோகம் -தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்படுத்தல் அமைச்சர் அனந்திர சசிதரனிடம் உள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளையை நிறைவேற்ற முதலமைச்சரும் மாகாண அமைச்சர்கள் இருவரும் தவறிவிட்டனர் என மனுதாரரான பா.டெனீஸ்வரன் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனை ஏற்ற நீதிமன்று, முதலைச்சர் மற்றும் அமைச்சர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டது.

இன்றைய தினம் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள் க.சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.