இந்தியாவுக்கு வந்த எச்சரிக்கை..! தவிர்க்கவேண்டியது என்ன..!

மனிதர்களின் அன்றாட தேவையான உணவுப் பொருள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, பால் ஆகும். வளரும் குழந்தைகளுக்கு மாட்டுப் பால் முக்கிய உணவாக இருக்கிறது. பாலை நேரடியாகவோ அல்லது டீ, காபியுடன் சேர்த்தோ அருந்தாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் நாம் அருந்தும் பாலில் 68.7 சதவீதம் தரமானது இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினரான மோகன் சிங் அலுவாலியா செய்தியாளர்களிடம் பேசியபோது மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நிர்ணயித்திருக்கும் தரத்தின்படி நமது நாட்டில் பால் அல்லது பால் உள்ளடக்கிய பொருட்கள் விற்பனை செய்வதில்லை. அன்றாடம் நாடு முழுவதும் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் உள்ளடக்கிய பொருட்களில் கலப்படமே தெரிகிறது. பாலில் சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட், ரீபைண்டு எண்ணெய், குளுகோஸ் போன்றவற்றை கலப்படம் செய்கின்றனர்.

மேலும் பால் அடர்த்தியாக இருக்கவும், நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்கும் அதில் திட்டமிட்டே யூரியா, ஸ்டார்ச், பார்மலின் போன்றவற்றையும் சேர்க்கின்றனர். இதுபோன்ற கலப்படம் உடல் உறுப்புகளுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

பால் மற்றும் பால் உள்ளடக்கிய பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால் இந்தியாவில் 2025–ம் ஆண்டில் 87 சதவீத மக்கள் புற்றுநோய் உள்பட மோசமான பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.