பனை அபிவிருத்திச் சபையின் 40 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு யாழ். நல்லூரில் நவீன கற்பகம் சிறப்பு அங்காடி சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வைத்தியகலாநிதி சி.சிவசங்கர் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் பாக்கியநாதன் தம்பதிகள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த சிறப்பு அங்காடியைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர்களான பசுபதி சீவரட்ணம், சோ. கோகுலதாசன் சபையின் பொதுமுகாமையாளர்கள் முகாமையாளர்கள், பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.கடந்த-1980 ஆம் ஆண்டில் சிறியதொரு கற்பகம் விற்பனை நிலையமாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கருகில் குறித்த விற்பனை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்நாட்டு யுத்தம் காரணமாக குறித்த விற்பனை நிலையம் முற்றுமுழுதாக அழிவடைந்து இயங்காத நிலையிலிருந்தது.கடந்த-2000 ஆம் ஆண்டு மீண்டும் குறித்த கற்பக விற்பனை நிலையம் மீளவும் கட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த-2010 ஆம் ஆண்டு முதல் குறித்த விற்பனை நிலையத்தின் விற்பனை நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டன.
மேற்படி கற்பகம் சிறப்பு அங்காடியில் பனம் உணவு உற்பத்திப் பொருட்கள்,அழகிய பனம் கைப்பணிப் பொருட்கள், பனை மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சிற்பப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இடம்பெற்றுள்ளன.முற்றுமுழுதாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சுவைமிக்க பனம் பானங்கள்,ஐஸ் கிறீம் மற்றும் சுவைமிக்க உணவுப் பொருட்கள் என்பனவும் இந்தச் சிறப்பு அங்காடியில் அடங்கியுள்ளன.இந்நிலையில், குறித்த விற்பனை நிலையம் புதுமெருகூட்டப்பட்டு நவீன கற்பகம் சிறப்பு அங்காடி எனும் பெயரில் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த நவீன கற்பகம் சிறப்பு அங்காடி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சிறப்பு அங்காடி திறந்து வைக்கப்பட்டுள்ளமை இயற்கை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.