சிறுமியை பலாத்காரம் செய்த புத்த துறவிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு

தாய்லாந்து நாட்டில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், வைராபான் சுக்பான் (வயது 39) முன்னாள் புத்த துறவி.

இவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியமையைத் தொடர்ந்து இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார். அவர் மீது பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.அவர் புத்தருக்கு உலகிலேயே மிகப்பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும்தொகை திரட்டி ஏமாற்றியமை தெரியவந்தது.

வங்கிக்கணக்குகளில் 7 லட்சம் டொலர் (சுமார் ரூ.4 கோடி) குவித்து உள்ளார். பல சொகுசு கார்களை வைத்து இருக்கிறார். ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றெல்லாம் தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.

இதில் அவர்மீது சட்ட விரோத பண பரிமாற்றம், மோசடி, ஒன்லைன் வழியாக நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய பாங்காக் நீதிமன்றம் அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் அவர்மீது புகார் கூறிய 29 நன்கொடையாளர்களுக்கு 8 லட்சத்து 61 ஆயிரத்து 700 டொலரை (சுமார் ரூ. 5 கோடியே 85 லட்சம்) திரும்பிக் கொடுக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.