20 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் `மாதவிடாய் மிகைப்பு’- தீர்வு என்ன?

இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்னைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு. ஏன் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன?

20 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் `மாதவிடாய் மிகைப்பு'- தீர்வு என்ன?

மாதவிடாய், பூப்படைந்த ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் மாதந்தோறும் ஏற்படும் ஒரு சுழற்சிமுறை நிகழ்வு. ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் என்றதும் நினைவில் வருவது வலிதான். ஒழுங்கற்ற நிலையில் மாதவிடாய் வருவது, அதிக ரத்தப்போக்கு, மிகவும் குறைவான ரத்தப்போக்கு, மாதவிடாய்க் காலத்துக்கு முன் அல்லது பின் ஏற்படும் வலி  எனப் பல பெண்கள் அந்தக் காலத்தில் பெரும் அவஸ்தையை எதிர்கொள்கிறார்கள்.

மாதவிடாய்

இன்றைய சூழலில், இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்னைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு. ஏன் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன? மாதவிடாய்கால வலியைத் தடுப்பது எப்படி என்பது குறித்து மகளிர் மகப்பேறு மருத்துவர் வினுதா அருணாச்சலத்திடம் கேட்டோம்.

“மாதவிடாய்க் காலத்தில் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படுகிறது, எத்தனை நாள்களுக்கு ரத்தப்போக்குத் தொடர்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். 28 முதல் 35 நாள்களுக்குள் ஏற்படும் சுழற்சியும், மூன்று முதல் ஏழு நாள்கள் வரை ரத்தப்போக்கு ஏற்படுவதும் ஆரோக்கியம். ஆனால், உடல் அமைப்புக்கு ஏற்றவாறு சுழற்சிக்கான காலமும் ரத்தப்போக்கின் அளவும் மாறுபடும்.

எது அதிக ரத்தப்போக்கு? 

மாதவிடாய் நாள்களில்,

* ஒரு நாளில் ஆறு நாப்கின் வரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவது

* தாங்கமுடியாத வயிற்றுவலி ஏற்படுவது

* ரத்தம் கட்டியாக வெளியேறுவது

* ஏழு நாள்களுக்கும் மேலாக ரத்தப்போக்கு இருப்பது

* அன்றாடப் பணிகளைக்கூட மிகவும் சிரமப்பட்டுச் செய்வது

* மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வது; மூச்சுவிடுவதில் சிரமம்

சிலருக்கு, மூன்று நாள்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும். ஆனாலும், அந்தக் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால், அவர்களும் அதிக ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களே. மாதவிடாயின்போது வெளியேறுவது அனைத்தும் கெட்ட ரத்தம் என்று நினைத்து பலர் அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்துவதுண்டு. அது நல்லதல்ல… மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் அதிக ரத்தப்போக்குப் பிரச்னையை `மாதவிடாய் மிகைப்பு’ (Menorrhagia) என்று சொல்வார்கள்.

மாதவிடாய்

அதிக ரத்தப்போக்கு உணர்த்தும் பிரச்னைகள்… 

* ஹார்மோன் இம்பேலன்ஸ் (Hormone Imbalance): கர்ப்பப்பையின் சீரான செயல்பாட்டுக்கு, ஈஸ்ட்ரோஜென் (Estrogen), புரொஜெஸ்ட்ரோன் (Progestrone) ஆகிய ஹார்மோன்களே காரணம். இவை சுரப்பதில் சிக்கல் ஏற்பட்டால், ரத்தப்போக்கு அதிகமாகும். ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை ஏற்பட உடல்பருமன், நீர்க்கட்டி, தைராய்டு போன்றவை காரணங்களாக இருக்கக்கூடும்.

* கர்ப்பப்பை செயல்பாட்டில் சிக்கல்: கர்ப்பப்பையிலிருந்து கருமுட்டை சரியாக வெளியேறாவிட்டால், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். புரொஜெஸ்ட்ரோன் சீரான அளவு சுரக்காவிட்டால், ஹார்மோன் இம்பேலன்ஸ் ஏற்பட்டு, ரத்தப்போக்கு அதிகமாகும்.

* கர்ப்பப்பையில் கட்டி: கர்ப்பப்பையின் சுவரிலோ, சுற்றுப்புறத்திலோ கட்டி ஏற்பட்டால் மாதவிடாய்க் காலத்தில் அதிக ரத்தப்போக்கு அல்லது தொடர்ந்து ஏழு நாள்களுக்கும் மேலாக ரத்தப்போக்கு, இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு போன்றவை ஏற்படலாம்.

* கருச்சிதைவு: கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, தொடர் ரத்தப்போக்கு போன்றவை கரு கலைந்துவிட்டதைக் குறிக்கும்.

* புற்றுநோய்: கர்ப்பப்பையில் ஏற்படும் சில கட்டிகள், புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டுக்குமான முக்கியமான அறிகுறி, அதிக ரத்தப்போக்குதான்.

* மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும். மெனோபாஸ் காலகட்டத்துக்குப் பிறகும்  ரத்தப்போக்கு ஏற்படுவது, புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

* மேற்கூறிய எந்தப் பிரச்னையும் இல்லாமல், ஊட்டச்சத்துக்குறைபாடு காரணமாக சிலருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். இப்படியான அதிக ரத்தப்போக்கு, ஒருகட்டத்தில் ரத்தச்சோகை, இரும்புச்சத்துக் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். தோல் வெளிறிக்காணப்படுதல், மிகவும் சோர்வாக உணர்தல், வலுவிழந்து காணப்படுதல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக இருக்கும்.

 

வயிற்று வலி

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

* ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும். மாதவிடாய் நாள்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்.

* உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஹார்மோன் சுரப்பை சமநிலையில் வைத்துக்கொள்ளலாம். மாதவிடாயின்போது மட்டுமன்றி தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. மாதவிடாய்க் காலத்தில் செய்யும் உடற்பயிற்சிகள் மிகவும் எளிமையானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

* மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். திரவ வடிவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெந்நீர் அருந்துவது, சூடான நீரைக்கொண்டு வயிற்றுப்பகுதியில் ஒத்தடம் கொடுப்பது போன்றவை வலி உணர்வைக் குறைக்கும்.

* மாதவிடாயின்போது பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்னை, `மூட் ஸ்விங்க்ஸ்’. அதைக்கட்டுபடுத்த, உணவில் ஒமேகா 3 போன்ற, நல்ல கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளலாம். தியானம் செய்வது, மனதை ஒருநிலைப்படுத்தும்.

* அடிக்கடி நாப்கினை மாற்றிக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டும். வெகுநேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது, பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும் ” என்கிறார் வினுதா அருணாச்சலம்.