பிரான்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள வீடியோ….

யுவதியொருவரிடம்   நபர்  ஒருவர்; அநாகரீகமான விதத்தில் நடந்துகொள்வதையும் அதனை தட்டிக்கேட்ட அந்த மாணவியின் கன்னத்தில் அந்த நபர் அறைவதையும் காண்பிக்கும்  வீடியோ வெளியாகி பிரான்ஸ் மக்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாரிசிற்கு வடகிழக்கே உள்ள பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை பாதிக்கப்பட்ட மாணவி சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார்.

22 வயதான மாணவி பாரிசின் 19வது மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பிட்ட நபர் தன்னை நோக்கி ஆபாச சமிக்ஞைகளை செய்ததுடன் அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டார் என அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

அவர் இவ்வாறு நடந்துகொள்வது முதல்தடவையல்ல கடந்த ஒரு வாரகாலமாக நான் இதனை எதிர்கொள்கின்றேன் இதனால் சீற்றமடைந்த நான் அவரை எச்சரித்தேன் என அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சீற்றமடைந்த அந்த நபர் கையில் இருந்த பொருளை மாணவியை நோக்கி வீசியுள்ளார்.

இதன் பின்னர் அவர் அந்த மாணவியின் முகத்தில அறைந்துள்ளார்.

இந்த காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

பாரிஸ் அதிகாரிகள் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்திற்கு பிரான்சின் அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட நபரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது சகித்துக்கொள்ள முடியாதது என அவர்கள் விமர்சித்துள்ளனர்.

பாலியல் ரீதியில் அநாகரீகமான விதத்தில் நடந்துகொண்டவரை எதிர்த்த மாணவியை பாராட்டியுள்ள பாரிஸ் மேயர் யுவதியின் துணிச்சலை பாராட்டியுள்ளதுடன்  இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

2018 இல் பிரான்சில் தான் அவமானப்படுத்தப்படுவதை சகித்துக்கொள்ளாத பெண்ணொருவர் தாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என  பிரான்சின் சமத்துவத்திற்கான அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது சுதந்திரம் தொடர்பான அடிப்படை பிரச்சினை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.