ஏன் மாமா என்னை ஏமாத்துன.. கையில் குளுக்கோஸ்.. மனசு நிறைய காதல்.. கண்ணீருடன் பென்னாடம் கனிமொழி!

பெண்ணாடம்: காதலித்து ஏமாற்றியவரை தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி இளம் பெண் நடத்தி வந்த தர்ணா போராட்டம் 3-,வது நாளை எட்டியுள்ளது.

இதில் அந்த பெண் திடீரென மயங்கி விழுந்ததால் பெண்ணாடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சவுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் கனிமொழி.

எம்.ஏ.படித்துள்ள கனிமொழியின் வயது 31. கனிமொழியும், பெண்ணாடத்தில் செங்கல் சூளை நடத்தி வரும் ஜானகிராமன் என்பவரும் ஒருவரையொருவர் விரும்பியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜானகிராமனிடம் கனிமொழி கேட்டார். அதற்கு அவர் சரியான பதில் சொல்லாமல் தட்டிக் கழித்தே வந்துள்ளார்.

பொறுத்து பொறுத்து பார்த்த கனிமொழி, இதுகுறித்து விருத்தாச்சலம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணையை துவக்க இருந்த நிலையில், ஜானகிராமன் மாயமாகிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்தார் கனிமொழி. தான் வசிக்கும் பகுதியிலேயே ஜானகிராமன் வீடு உள்ளதால், அங்கே சென்று தர்ணாவில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஈடுபட்டார்.

தலைமறைவான ஜானகிராமன் வீட்டு முன்னாலேயே இளம்பெண் போராட்டம் நடத்தி வருவது அந்த பகுதியில் மிகவும் பரபரப்பானது.

இதையடுத்து, நேற்று மாலை ஜானகிராமன் விருத்தாச்சலம் மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து போலீசார் ஜானகிராமனை கனிமொழியிடம் அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினர்.

அதற்கு ஜானகிராமன், திருமணம் செய்ய மாட்டேன், பேசவும் மாட்டேன் என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் போலீசார், பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக கைது செய்து தங்களுடன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கனிமொழி இன்று காலை திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் மருத்துவர்களை அழைத்து வந்து பார்த்ததில், உடல் பலவீனமானதால் மயங்கி விழுந்ததாக தெரிவித்து குளுக்கோஸ் ஏற்றினர். எனினும் கனிமொழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.