குடிநீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் மனித எச்சங்கள்!! யாழ்ப்பாணத்தில் பரபரப்பு!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு – நாயன்மார்கட்டுப் பகுதியில், குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளமை, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுத்த காலத்தில் முன்னரங்கு காவலரண் அமைத்து இராணுவம் நிலை கொண்டிருந்த இடத்தில் இருந்தே இவ்வாறு நேற்று (வெள்ளிக்கிழமை) மனித எச்சங்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன.இச்சம்பவம், அப்பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக  கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம், கல்வியங்காடு – நாயன்மார் கட்டுப் பகுதியில், கிளிநொச்சி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்கான நிலக்கீழ் நீர்த்தாங்கி நிர்மாணிக்கும் பணிகள் இந்திய நிறுவனத்தின் ஒப்பந்த காரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறித்த பணிகளின் போது, இயந்திர வலு கொண்டு நிலக்கீழ் தாங்கியினை சுற்றி அகலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அங்கு சுமார் 3 அடி ஆழத்திற்கு மண்ணை அகழ்ந்த போது அங்கு மனித எச்சங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதான பொறியியலாளருக்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர், யாழ்.பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அழைத்திருந்தார்.

யுத்த காலத்தில் காவலரண் அமைத்து இராணுவம் நிலை கொண்டிருந்த குறித்த இடத்தில் இருந்து மனித எச்சங்கள் தென்பட்டமை குறித்து மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.எனினும், மனித எச்சங்களை கவனத்தில் கொள்ளாது, நீர்விநியோகத்திற்காக நிலக்கீழ் தாங்கி அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.