கனடா பிரதமர் ஜஸ்டின் மீது பாலியல் குற்றச்சாட்டு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மீதான பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கனடா நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இதற்கு முன் அவரது தந்தை பியேர் ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருந்தார். அந்த காலகட்டத்தில் 2000ம் ஆண்டில், கொலம்பியாவில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது 28 வயது இளைஞரான ஜஸ்டின், அந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அங்கு ஜஸ்டின் ட்ரூடோ பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது. அந்த பெண் பத்திரிகையாளர் இது குறித்து நாளிதழ்களில் எழுதினார். கனடாவின் கிறிஸ்டன் வேலி அட்வான்ஸ் என்ற இதழிலும் இந்த செய்தி அப்போது வெளியானது.

இந்த நிலையில் தற்போது கனடாவில் மீண்டும் இந்த செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் கனடா பிரதமர் அலுவலகமும், ஜஸ்டின் ட்ரூடோவும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

ஜஸ்டின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அந்த காலகட்டத்தில் சில காரணங்களால் மிகவும் வருத்தமான மனநிலையில் சில காலம் இருந்தேன். அதில் இருந்து மீள்வதற்காக அந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றேன். நீண்ட இடைவெளிக்குப் பின் நான் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி என்பதால் அன்று நடந்த சம்பவங்கள் நன்றாக நினைவில் உள்ளன. நாளிதழ்களில் வந்தது போன்று எந்த சம்பவமும் நடக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பெண்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது