கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் தெரியுமா?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம். அவை எதற்காக செய்யப்படுகின்றன தெரியுமா!

தமிழர்கள் கோவில்களுக்கு சென்றால், அங்கு உள்ள கிணறுகளிலும், தெப்பக்குளங்களிலும் காசு போடும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. அதற்கு காரணம் உள்ளது.

காரணத்தை அறியும் முன் அப்போதைய காசுகள் பெரும்பாலும் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டவை என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.

செம்பு ஒரு உலோகம். இது பாறை, மண், நீர், வண்டல் மற்றும் காற்றில் இயற்கையாக உருவாகிறது. நல்ல ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கு சில உலோகங்கள் நமது உடலில் கலப்பது அவசியம்.

அந்த வகையில் செம்பு உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது. நேரடியாக செம்புவை உண்ண முடியாது என்பதால் தண்ணீருக்குள் போட்டு வைப்பது, தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள், ஊற்றி வைக்க உதவும் குண்டா, அண்டாக்களை செம்புவால் தயாரிப்பது ஆகிய வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

கிணறு, குளங்களில் உள்ள தண்ணீருடன் செம்பு கலந்தபின் அந்த நீரை அருந்துவது வலிமையும், குளிர்ச்சியைம் தந்து நலன் பயக்கும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குளங்கள், குட்டைகள், கிணறுகள் மற்றும் ஏரிகள் ஆகியவையே அடிப்படை நீர் ஆதாரங்களாக இருந்தன. குளம் இல்லாத கோவிலைப் பார்ப்பதே அரிது.

கோவில் குளத்து நீரை தீர்த்தமாக மதித்தே மக்கள் அருந்தினார்கள். இதனால் செப்புக்காசுகளை குளத்தில் போடுவது வழக்கமாக இருந்தது. அதையே இன்றும் ஒரு வழக்கமாக இரும்புக் காசுகளைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் பலர்.