கதிர்காமத்திற்கான பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

நுவரெலியா- மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பாதயாத்திரையின் போது ஒரு நாளைக்கு 40 கிலோ மீற்றர் தூரத்தை பயணிக்கும் இவர்கள் நுவரெலியா, பண்டாரவளை, வெல்லவாய, புத்தள வழியாக கதிர்காமத்தை சென்றடையவுள்ளனர்.

மேலும் இவர்கள் பாதயாத்திரையாக செல்லும் பிரதான நகரங்களிலுள்ள கோயில்கள் மற்றும் விகாரைகள் ஆகியவற்றில் தங்குவதாகவும் அவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள்தெரிவித்துள்ளனர்.

கதிர்காம ஆடிவேல் விழா எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 26 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளதாக கதிர்காம ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.