பிரபாகரனின் சீடர்கள் மீதான தடை நகைப்பிற்குரியது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது சீடர்கள் மீதான தடை நகைப்பிற்குரியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வார இறுதி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்ற நபர்கள், நாடு திரும்பி கிளிநொச்சிக்கு சென்று தங்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு இலங்கை வந்தவர்கள் பணத்தையும் எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் புலிகளுடன் தொடர்புடைய 14 பேருக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிப்பதானது நகைப்பிற்குரிய விடயமாகும்.

உலகின் அநேக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

எனினும் இலங்கை பயங்கரவாதம் தொடர்பில் மிகவும் நெகிழ்வு போக்கான கொள்கைகளை பின்பற்றி வருகின்றது. இது யாரின் தேவைக்காக?

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுப்பதற்கு உசிதமான தருணத்தில் அதனைச் செய்யாது, அவர்கள் வந்து திரும்பியதன் பின்னர் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.