டொனால்ட் டிரெம்பின் அதிரடி உத்தரவு!

அமெரிக்க இராணுவத்தில் விண்வெளிப் படையை உருவாக்க பென்டகனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரெம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவத்தில் தரைப்படை, விமானப்படை, கடற்படை, கப்பல் படை, கடலோர பாதுகாப்பு என 5 பிரிவுகள் உள்ள நிலையில், 6 ஆவது படைப் பிரிவாக விண்வெளிப்படை உருவாக்கப்படவுள்ளது.

இந்நிலையிலேயே விண்வெளிப் படையை உருவாக்குவதற்கு, அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனுக்கு ஜனாதிபதி டிரெம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

‘‘அமெரிக்கா வெறுமனே விண்வெளியில் இருப்பை கொண்டிருப்பது போதுமானதாக இருக்காது. நாம் கண்டிப்பாக விண்வெளியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

எனவே 6 ஆவது விண்வெளிப்படையை நாம் உடனடியாக உருவாக்க வேண்டும். அதுகுறித்து இராணுவம் மற்றும் பென்டகனுக்கு நான் உத்தரவிடுகிறேன்.

நம்மிடம் ஏற்கனவே விமானப்படை உள்ளது. இருந்தாலும் தற்போது விண்வெளிப்படையும் அமைக்கப்படுகிறது. இரண்டும் தனித்தனியானது. ஆனால் இரண்டும் சம வலிமைமிக்கது.

விண்வெளிப்படையின் நடவடிக்கை குறித்து தற்போது உடனடியாக அறிவிக்க இயலாது. மேலும் அதை உடனடியாக அமைக்கவும் முடியாது. ஏனெனில் இதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.

அமெரிக்கா ஒரு குடியேற்ற முகாமாக இருக்காது. அமெரிக்காவை ஒரு குடியேற்ற முகாமாக மாற்ற நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.’’ எனத் தெரிவித்துள்ளார்.