பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட அரசு ஊழியர் : பதறிய மக்கள்!

சென்னை காசி மேடு பகுதியில் அரசு ஊழியர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

காசிமேடு அமராஞ்சி புரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் . ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

இன்று காலை காசிமேட்டில் உள்ள காசிபுரம் பகுதி மக்கள் நிறைந்த பரபரப்பான இடம். இங்கு வழக்கமாக டீ சாப்பிட சிவகுமார் வந்திருக்கிறார். அங்கு வந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பலால் சூழப்பட்டிருக்கிறார். நிலைமை புரிந்து ஓட தொடங்கியிருக்கிறார் சிவகுமார்.

அத்தனை பேர் கூட்டமாக உள்ள இடத்தில சிவகுமாரை ஓட ஓட கண்ட இடங்களில் வெட்டியிருக்கின்றனர். உடலில் எல்லா இடங்களிலும் அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. மக்கள் அலறியபடி அங்குமிங்கும் ஓடினர். ஒரு சிலர் சிவகுமாரை அருகில் உள்ள ஸ்டாண்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரிக்க ஆரம்பித்ததில் சிவகுமாருக்கு கால்வாய் விடயத்தில் ஒருவருடன் தகராறு இருந்ததாகவும், கஞ்சா வியாபாரி ஒருவருடன் முன் விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.