தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அழைத்து வந்தால் அமைச்சர் பதவி தரக்கூட தயார்‘ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சிலருக்குத் தூதுவிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். இதையடுத்து அ.தி.மு.கவிலிருந்து பிரிந்த ஓ.பன்னீர் செல்வம், தர்மயுத்தத்தை தொடங்கினார். இதனிடையே முதல்வராகலாம் என எண்ணிய சசிகலாவின் கனவு சிறைத்தண்டனையால் தடைபட்டது. முதல்வராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றபோது, எடப்பாடி பழனிசாமியை சசிகலா தேர்ந்தேடுத்தார். தொடர்ந்து சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து விலக்கினால் மட்டுமே அ.தி.மு.கவுடன் இணைவேன் என்ற ஓ.பி.எஸ் கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் சசிகலா, தினகரன் தலையிடு இருக்காது என எடப்பாடி அறிவித்தார்.
இதையடுத்து தினகரன் ஓரணியாகவும், எடப்பாடி, ஓ.பி.எஸ், ஓரணியாகவும் மாறினர். இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவை சபாநாயகருக்குப் பரிந்துரை செய்தார். கொறாடாவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால், ஆளுநரிடன் மனு அளித்த எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடக்கப்பட்ட வழக்கு நிலுவையிலிருந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீரப்பு குறித்து தினகரன் தரப்பினரும், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்நிலையில் தீர்ப்பு வழங்கிய இருநீதிபதிகளும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர். 3-வது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்காலிகமாகத் தீர்வுதான் ஏற்பட்டுள்ளது; விரைவில் தீர்ப்பு எதிராக வந்தால் ஆட்சிக்கு ஆபத்து எனத் தனக்கு நெருங்கிய சிலரிடம் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மேலும் `ஐந்தாண்டுகாலம் ஆட்சியை எப்படியாவது நிலைக்கச்செய்யவேண்டும். அதற்கு ஒரே வழி தினகரன் எம்.எல்.ஏ-க்களுக்குத் தூண்டில் போடுவதுதான். ஆக அதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்குங்கள் எனத் தனக்கு நெருங்கிய வட்டாரங்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளாராம். ஒருபடி மேலே சென்று தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களை கூண்டோடு அழைத்து வருபவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாராம். மேலும் தினகரன் தரப்பிலிருந்து வரும் எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கிய கான்ட்ராக்ட்கள் கைமாற்றப்படும் எனக் கூறி தூண்டில் போட்டு இழுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு முன்பே இந்தச் செயல்கள் அரங்கேற நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.