நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து குன்னுார் சென்ற அரசு பஸ், மேல்மந்தடா என்ற இடத்தில் சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழுந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. விபத்து எதனால் ஏற்பட்டது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் பணிமனையை சேர்ந்த அரசு பஸ், ஊட்டியில் இருந்து நேற்று காலை 34 பயணிகளுடன் குன்னுார் புறப்பட்டது. பஸ்சை ஊட்டியை சேர்ந்த ராஜ்குமார் (40) இயக்கியுள்ளார். நடத்துனராக பிரகாஷ் செயல்பட்டுள்ளார். சுமார் 11 அளவில் மந்தடா என்ற மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்ப்பாராத விதமாக சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சம்பவ இடத்துக் விரைந்த போலீஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எஸ்.பி., சண்முகபிரியா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். மேலும், படுகாயம் அடைந்த பயணிகள் 19 பேரை 18 ஆம்புலன்ஸ்கள் உதவியுடன், ஊட்டி அரசு மருத்துவமனையில் இருந்து கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக காெண்டு செல்ல போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சுட்டிப்பாக வேலை செய்து போக்குவரத்தை சீரமைத்து கொடுத்ததாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.
ஊட்டி டேவிஸ் டேல் பகுதியை சேர்ந்த தர்மன் (64), குன்னூரை சேர்ந்த தினேஷ் (32), ஊட்டி கொலக்கொம்பை பகுதியை நந்தகுமார் (36), பிரபாகரன் (50), பெங்களூருவை சேர்ந்த சாந்தகுமார் (55), ஜெய்ஸ்ரீ (49) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட 19 பேரில், ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த அல்மாஷ் (29) என்ற பெண் பலியானார்.
ஒரு கட்டத்தில் விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் பலர் ஊட்டி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் உதவும் மனப்பாண்மையில் அங்கு குவிந்தனர். ஆனால் பாேலீஸார் அவர்களை கூட்டம் கூடாமல், வேடிக்கை பார்க்காமல் கலைந்து செல்லுமாறு கூற, ”நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பஸ்கள், ஒன்றுகூட முறையாக பராமரிக்கப்படுவதில்லை, இதனால் தான் விபத்து ஏற்படுகிறது” என்று டவுன் டி.எஸ்.பி. திருமேணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சூழ்நிலையை புரிந்து கொண்ட அவர்கள் தங்களை கட்டுப்படுத்தி கொண்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ‛‛வேறு ஒரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான விசாரணை நடந்து வருகிறது’’என்றனர். இது குறித்து பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூறுகையில், ‛‛ஊட்டியை அடுத்த வேல் வியூ பகுதியில் இருந்து எல்லநல்லி வரை சாலை வசதி படுமோசமாக உள்ளது. அனைத்து வாகனங்களும் கேத்தி பள்ளத்தாக்கை கடந்து செல்ல வேண்டியுள்ளன. இப்பகுதியில் முறையான தடுப்புச் சுவர்கூட அமைக்க தவறிய நெடுஞ்சாலைத் துறையினர்தான் விபத்து ஏற்படுவதற்கான காரணம். மேலும், கடந்த ஜனவரி மாதம் லாரி ஒன்று இதே பகுதியில் ஒரு வீட்டின் மீது விழுந்து விபத்திற்குள்ளாகி ஓட்டுநர் மற்றும் ஒருவர் பலியாகினர்’’என்றனர்.