“ எங்கள் ஊர் விவசாயிகள், அதிகம் உழைப்பவர்கள். நிலத்தை உழும்போது சேற்றில், வெறுங்காலுடன்தான் நடப்பார்கள். ஏனெனில், அவர்கள் நிலத்தைக் கடவுளாக மதிக்கிறார்கள்.
‘சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறுங்காலுடன் நடக்கக் கூடாது’ என்கிறீர்கள். எங்கள் விவசாயிகளுக்குத் தீர்வு உண்டா..?” – வெளிநாட்டில் நடந்த ஒரு மருத்துவர்கள் மாநாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கேட்ட கேள்வி இது!
விவசாயிகள் மட்டுமல்ல… எத்தனையோ ஏழை, எளிய மக்களையும் விட்டுவைக்காமல் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது சர்க்கரைநோய். சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பாதங்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்பது குறித்து சர்க்கரை நோய் நிபுணர் ராஜேந்திரன் விளக்குகிறார்.
“இன்று பலருக்கும் சர்க்கரைநோய் குறித்த விழிப்பு உணர்வு வந்துவிட்டது. ஆனால், அதைத் தடுப்பதற்கான தீவிரம் இல்லை. பலர் அதற்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்.
இன்சுலின் சுரப்பு குறைவதுதான் சர்க்கரைநோய்க்கு முக்கியக் காரணம், உடல்பருமன், மாறிவிட்ட வாழ்க்கைச் சூழல், தவறான உணவுப் பழக்கங்களெல்லாம் இதற்கு அடித்தளம்.
3,000 கலோரிகள் கொண்ட உணவைச் சாப்பிட்டால், அதற்குரிய வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால், சர்க்கரைநோய் வரும். இப்போதெல்லாம் உடற்பயிற்சி செய்வது குறைந்துவிட்டது, உட்கார்ந்த இடத்திலேயே வேலை என ஆகிவிட்டது. போதுமான உடலுழைப்பின்மை இந்த நோய்க்கு வழிவகுத்துவிட்டது.
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. தமிழகத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 12-லிருந்து 17 சதவிகிதமாக இருக்கிறது.
கிராமத்திலோ 2 சதவிகிதம்தான். எலெக்ட்ரானிக் பொல்யூஷன் (Electronic Pollution) மூலம் மேக்னடிக் ரேடியேஷன் நம் உடலிலிருக்கும் பீட்டா செல்களைத் தாக்கும்.
இந்த பீட்டா செல்கள்தான் இன்சுலினைச் சுரக்கச் செய்பவை. இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரைநோய் வருகிறது. வாழ்க்கை முறை, புகைபிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட பழக்கங்களாளாலும் ஏற்படுகிறது.
முன்பெல்லாம் இதை, `பணக்கார வியாதி’ என்பார்கள். இப்போதோ, அது ஏழைகளையும் விவசாயிகளையும்கூட விட்டுவைக்கவில்லை. விவசாயிகள் சாப்பிடுவது கூழும் கஞ்சியும்தான். அப்படியிருக்கும்போது அவர்களுக்கும் வரக் காரணம் என்ன?
இன்றைக்கு விவசாயத்தில் அதிகமாகப் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மருந்துகளை போதுமான பாதுகாப்பு கவசம் இல்லாமல், விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள்.
பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும்போது, அது அவர்களின்மீது படுகிறது. அந்த ரசாயனம், பீட்டா செல்களைப் பாதிப்பதால் சர்க்கரைநோய்க்கு ஆளாகிறார்கள்.
இது, கண்பார்வையிழத்தல், வலிப்பு, மாரடைப்பு என பல தொற்றா நோய்களை ஏற்படுத்திவிடும். இந்த நோய் பாதிப்பில் மிக மோசமானது காலில் ஏற்படக்கூடிய புண்கள்.
சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கால் பாதங்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பதுபோல இல்லாமல் ‘வரும் முன் காப்போம்’ என்று பாதங்களைப் பாதுகாக்க முயல வேண்டும்.
வெளியே போகும்போது செருப்பில்லாமல் நடக்கக் கூடாது. கைக்கண்ணாடியைக் கொண்டு பாதங்களைத் தினமும், நன்கு கவனிக்க வேண்டும்.
பாதத்தில் புண், பாதம் கறுப்பு நிறத்தில் மாறுதல், தடிமனான தோல் போன்றவை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற வேண்டும்.
கால் ரத்த ஓட்டப் பாதிப்பால், கால் அழுகிப் போகும் நிலைமைகூட ஏற்படலாம். இந்த நிலைமை ஏற்பட்டால், குறிப்பிட்ட கால் மற்றும் விரல்களை அகற்ற நேரிடும். இது மிகவும் வேதனையான உண்மை. ஆரம்பத்திலேயே நமது பாதங்களை பராமரித்து வந்தால், இதுபோன்ற விளைவுகளைத் தடுத்துவிடலாம்.
தினமும் குளிக்கும்போது பாதங்களை நன்றாகச் சோப்பு போட்டு, சுத்தமான நீரில் கழுவி, உலர்ந்த, மெல்லிய துணியால் துடைக்க வேண்டும்.
ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டால், அலட்சியப்படுத்தக் கூடாது.
நவீன சிகிச்சைகள்…
இப்போது சர்க்கரைநோயால் கால் அழுகிப்போகும் நிலை ஏற்பட்டாலும் கால் அகற்றுவதைத் தடுக்க, நுண்ணுயிர் கிருமிக் கட்டுப்பாடு (Infection Control), காயம், காயம் பரவுதல் கட்டுப்பாடு, சர்க்கரை அளவு கட்டுப்பாடு (Metabolic Control), ரத்த ஓட்ட கட்டுப்பாடு (Vascular Control), கால் அழுத்த மாற்றுக் கட்டுப்பாடு (Mechanical Control) போன்ற சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
சர்க்கரை நோய் நிபுணர் ராஜேந்திரன்
இந்தச் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள, பாதிக்கப்பட்டவரின் ஒத்துழைப்பு அதிகம் தேவை. அதேபோல, டிரெஸ்ஸிங் (Dressing) செய்யும் மருத்துவருக்கும் பொறுமை அவசியம். அப்படிச் செய்யும்போது கால்களையோ, விரல்களையோ இழந்துவிடாமல் காப்பாற்றிவிடலாம். சில புண்கள் ஆறுவதற்கு ஆறு மாத காலம் வரை ஆகலாம். எனவே, மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.