மருத்துவமனையில் இறந்ததாக கூறிய பிறந்த குழந்தை மயானத்தில் உயிர்த்தெழுந்த சம்பவம் ஒன்று தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.தமிழகம் நெல்லை மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர் பிரசவத்துக்காக சுரண்டை மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றுக் காலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், சிறிது நேரத்திலேயே மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்தாகவும் உடனே அடக்கம் செய்யுமாறும் கூறி அனுப்பியுள்ளார்.
பிறந்த சில நிமிடங்களில் தாய் கண் விழிக்காமல் இருக்கும்போதே குழந்தை இறந்துவிட்டதை நினைத்து உறவினர்கள் கதறி அழுதபடி இறுதி சடங்கு செய்ய முயன்றுள்ளனர்.அவர்களது வழக்கப்படி காது குத்திதான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதால், மயானத்தில் குழந்தையை வைத்துவிட்டு நகைக் கடையிலுள்ள ஒருவரை அழைத்து வந்து குழந்தைக்கு காது குத்தியுள்ளனர்.
காது குத்தும்போது குழந்தை கதறி அழுவதைக் கண்டு திகைத்த உறவினர்கள் உடனடியாக தென்காசி மாவட்ட மருத்துவமனை அம்யூலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சிறிதும் தாமதிக்காமல் விரைந்த அம்யூலன்ஸில் குழந்தை மயானத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தென்காசி அரச மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளை ஹை கிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முறையாக பரிசோதனை செய்யாமல் குழந்தை இறந்துவிட்டது என கூறிய மருத்துவமனை மருத்துவர்களை உறவினர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
அதே நேரத்தில், குறைவான நேரத்தில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சையளித்து பாளை மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய அம்யூலன்ஸ் சாரதியை அனைவரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.






