அரசாங்க பணத்தைக் கொண்டு புலிகளுக்கு நினைவஞ்சலி! சிங்கள ஊடகம்

அரசாங்கத்தின் பணத்தைக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் முள்ளிவாய்க்காலில் நடத்தப்படவுள்ள நிகழ்வுகளுக்கு அரசாங்கப் பணம் செலவிடப்படவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாகும்.இவ்வாறான ஓர் நிலையில் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு அரசாங்கப் பணத்தை வட மாகாணசபை செலவிட முடியாது.

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் துறைசார் விடயங்கள் குறித்த நியதிகளை மீறி, நினைவஞ்சலி நிகழ்வுகள் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்தின் அனுமதியின்றி முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் ஒரு பகுதியை துப்பரவு செய்துள்ளதாக சிங்கள ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.