யாழ். நகரில் நேற்றிரவு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் தாக்கப்பட்டனர். அவர்கள் பயணித்த வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது.
சிறை அலுவலர்களைத் தாக்கினார் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் சம்பவ இடத்தில் இருந்து பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் இது தொடர்பில் உத்தியோகபூர்வத் தகவல்கள் எதனையும் சிறைச்சாலை வட்டாரங்களோ பொலிஸாரோ தர மறுத்துவிட்டனர்.
சம்பவம் யாழப்பாணம் சத்திரச் சந்திக்கு அண்மித்த பகுதியில் இரவு 8 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணச் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவரே தாக்கப்பட்டனர்.
அவர்கள் பயணித்தது என்று கூறப்படும் வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடி அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மதுபான நிலையத்தில் இருந்தே சிலர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களைத் தாக்கித் துரத்திக் கொண்டு வந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
உத்தியோகத்தர்கள் அவர்களுடைய வாகனங்களுக்குள் ஏறிய போது வாகனம் அடித்துச் சேதமாக்கப்பட்டது. சிறைச்சாலை அலுவலர்கள் சிவில் உடையில் காணப்பட்டனர்.
சம்பவத்தை அடுத்து பொலிஸார், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறப்பு அதிரடிப்படையினர் அந்த இடத் துக்கு வரவழைக்கப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர் என்று சம்பவத்தை நேரில் கண்ட சிலர் கூறினர்.
பொலிஸார், படையினர், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிஐடியினர் எனப் பலர் அங்கு குழுமியிருந்தனர். சிறிது நேரத்தில் அங்கிருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.
“உணவு வாங்குவதற்காகச் சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்களை மதுபான நிலையத்தில் இருந்து வந்தவர்கள் அடித்துள்ளனர். சம்பவத்தில் உத்தியோகத்தர்கள் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்துத் தாக்கப்பட்ட வாகனமும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பபட்டுள்ளார்’’ என்று பொலிஸ் தரப்பினர் தெரிவித்தனர்.
எனினும் தெல்லிப்பழைக்குச் சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்களே இடையில் மறித்துத் தாக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலைத் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
இந்தத் தகவல்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







