`என்னை விட்டுடுங்க’ – பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்

பாஜக பிரமுகர் பிரேம் ஆனந்த் 

குழந்தைகளுக்கு எதிராக சமீபகாலமாக நடந்துவரும் பாலியல் கொடுமைகள் நாட்டையே அதிரவைத்து வருகின்றன. இந்தநிலையில், ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் ஒருவரை ஈரோடு ரயில்வே போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த தம்பதி தங்களுடைய குழந்தைகள், உறவினர்கள் என 10 பேருடன் திருவனந்தபுரத்தில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு (ஏப்ரல் 21) சனிக்கிழமை மதியம் திருவனந்தபுரம் – சென்னை மெயில் எக்ஸ்பிரஸில் ஏறியிருக்கின்றனர். ரயிலில் முன்பதிவு செய்திருந்ததால், தங்களுடைய பக்கத்தில் அமர்ந்தவர்கள், இரவு உணவை முடித்துவிட்டு கண் அசந்திருக்கின்றனர். இரவு 12 மணியளவில் அந்தத் தம்பதியின் 9 வயது மகள் கத்தி கூச்சல்போட, அனைவரும் பதறியடித்து எழுந்திருக்கின்றனர். அதே பெட்டியில் பயணம் செய்த நபர் ஒருவர் அந்தச் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரியவர, அந்த நபரை பயணிகள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். அதையடுத்து, ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து, ரயில் ஈரோடு ஸ்டேஷனில் நின்றவுடன் அந்த நபரை  போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அந்தச் சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அந்த நபரை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் பிரேம் ஆனந்த் என்பதும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார் என்பது போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது. மேலும், அவர் பா.ஜ.க தென்சென்னை மாவட்டத் துணைத் தலைவராக இருந்துவருவதும் விசாரணையில் தெரிந்திருக்கிறது. ‘தயவுசெஞ்சு என்னை விட்டுடுங்க. நான் பி.ஜே.பியில பொறுப்புல இருக்கேன். எனக்குன்னு பெரிய செல்வாக்கு இருக்கு. இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா அசிங்கமாயிடும்’ என பிரேம் ஆனந்த் போலீஸாரிடம கதறியிருக்கிறார். இந்த பிரேம் ஆனந்த் 2006-ம் ஆண்டு ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டிருக்கிறார்.