குரே- விக்னேஸ்வரன் இடையே உச்சக்கட்ட முறுகல்!

வடமாகாண அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதமைச்சர் க. சர்வேஸ்வரனுக்கும், மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்று நடைபெறவிருந்த செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பாக மாகாண ஆளுநரும், பதில் முதலமைச்சரும் இன்று சந்தித்தனர்.

இதன்போது, மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரனை நியமிக்க வேண்டும் என மாகாண கல்வி அமைச்சரும், பதில் முதலமைச்சரும் வலியுறுத்தினர்.

ஆனால், மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகனதாஸ் மாற்றப்படுவதுடன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராகவும், பயிற்சி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாகவும் தெய்வேந்திரன் நியமிக்கப்படுவார் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனத்தை ஏற்க மறுத்த பதில் முதலமைச்சர், தம்மால் பரிந்துரைக்கப்படுபவர்களை மட்டுமே செயலாளர்களாக நியமிக்க முடியும் என கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

முரண்பாட்டை தொடர்ந்து இந்தியா சென்றுள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாக தொலைப்பேசியில் தொடர்புகொண்ட பதில் முதலமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரன் நியமிக்கப்படாவிடின், அனைத்து நியமனங்களையும் உடன் நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அதனையடுத்து ஆளுநரால் இன்று வழங்கப்படவிருந்த செயலாளர் மாற்றங்கள் பிற்போடப்பட்டுள்ளன.