சென்னை ஐ.ஐ.டி-க்கு உள்ளேயே கடும் எதிர்ப்பு! அதிரவைத்த மாணவர்கள்!

சென்னை ஐ.ஐ.டி கல்லூரியில் பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் கறுப்புச்சட்டை அணிந்து கோஷம் எழுப்பினர்.

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு சட்டை அணிந்து போராட்டம்

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியைத் தொடங்கி வைக்க இன்று சென்னை வருகை தந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று தமிழக அரசியல் அரசியல் கட்சியினர் தெரிவித்திருந்தன.

கடந்த முறை `தினத்தந்தி’ பவள விழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடி, காமராஜர் சாலையில் மக்களைப் பார்த்து கையசைத்தவாறு சென்றார். தமிழகத்தில் தற்போது, அசாதாரண சூழல் நிலவியதால், பிரதமர் மோடியின் பயணத் திட்டம் வான் வழியாகவே அமைக்கப்பட்டிருந்தது. திருவிடந்தை நிகழ்ச்சி முடிந்ததும் சென்னை ஐ.ஐ.டி-க்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பிரதமர், அடையாறு புற்றுநோய் மைய நிகழ்ச்சிக்கு காரில் செல்வது மட்டுமே இந்த முறை சென்னையில் பிரதமர் மோடியின் தரை மார்க்க பயணம்.

இதற்காக, ஐ.ஐ.டி-யிலிருந்து தரை மார்க்கமாக அடையாறு புற்று நோய் மையத்துக்குச் செல்லும் வகையில் புதிய பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பாதையில் பிரதமர் மோடி இன்று காரில் சென்றபோது, ஐ.ஐ.டி மாணவர்கள் சிலர், ‘காவிரி நீர் மேலாண்மை வாரியம் வேண்டும்’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர். மெக்கானிக்கல் சயின்ஸ் கட்டடம் முன் நின்று கோஷமிட்ட மாணவர்கள் கறுப்புச்சட்டை அணிந்திருந்தனர்.