பெற்றோர்களின் போராட்டத்தால் உடனடியாகப் பணி மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்!

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் கண்ணன்

பெற்றோர்களின் போராட்டத்தால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் உடனடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

பள்ளியின் கல்வித் தரத்தை குறைத்து மாணவர்கள் எண்ணிக்கை குறைய காரணமான ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சின்ன அத்திக்குளம் கிராம மக்கள், நேற்று பள்ளிக்குப் பூட்டு போட்டும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தினர். வரும் மே மாதத்தில் குறிப்பிட்ட மூன்று ஆசிரியர்களையும் பணியிட மாறுதல் செய்வதாக உறுதியளித்திருந்தனர். அதில் குறிப்பாக கிராம மக்களால் அதிகமாகப் புகார் கூறப்பட்ட ஆசிரியர் கண்ணனை வேறு பள்ளிக்கு மாற்றுப் பணிக்கு அனுப்புவதாக உறுதி அளித்ததையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால், இன்று அத்திகுளம் பள்ளிக்கு ஆசிரியர் கண்ணன் வந்ததால் மக்கள் ஆத்திரமடைந்தார்கள். ஆசிரியர் கண்ணன் மீது பாலியல் உட்பட பல குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர் பள்ளிக்கு வரக் கூடாது என்றும், பள்ளிக்கு வந்தால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறினர். இதனையடுத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.விஜயலட்சுமி, ஆசிரியர் ஆர்.கண்ணனை செம்பட்டையன்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாற்றுப் பணிக்கு அனுப்பிவைத்தார். மேலும், மக்களின் புகார்களுக்கு உள்ளான தலைமை ஆசிரியை சரளா, ஆசிரியை விஜயராணியை மே மாதம் வேறு பள்ளிக்கு மாற்றுவதாக கல்வித் துறையினர் உறுதியளித்ததையடுத்து இன்று போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.