`பிளாஸ்டிக் பையில் வைத்துக் கடத்தப்பட்ட 6 மாத கைக்குழந்தை’!

பிறந்து ஆறு மாதமே ஆன குழந்தை, மர்ம நபரால் கேரி பேக்கில் மறைத்துவைத்து பேருந்தில் கடத்திச்செல்ல முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகிறார்கள்.

குழந்தை கடத்தல்

நெல்லை சந்திப்புப் பேருந்து நிலையத்தில், பஸ்ஸில் இருந்து இறங்கிய நபர் ஒருவரின் கையில் கேரி பேக் இருந்துள்ளது. அதன் உள்ளே கைக்குழந்தை இருப்பதை அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரைப் பிடித்து விசாரித்தபோது, முண்ணுக்குப்பின் முரணாகப் பேசியதால், சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர்கள், உடனடியாக அந்தக் குழந்தையைக் கைப்பற்றியதுடன், அந்த நபரையும் பிடித்து ’சரணாலயம் குழந்தைகள் காப்பகம் கொண்டுசென்று ஒப்படைத்தனர்.

அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால், சரணலய ஊழியர்கள் நெல்லை சந்திப்பு காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அத்துடன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலரான தேவ் ஆனந்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபரின் பெயர் முருகேசன் என்பதும், பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவர், தச்சநல்லூரில் உள்ள ஒரு பெண்ணுக்காக 6 மாத ஆண் சிசுவை எடுத்து வந்ததாகவும், அந்தப் பெண், பேருந்து நிலையம்வந்து  பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருந்ததாகக் கூறியுள்ளார். ஆனாலும், அந்த ஆண்குழந்தை யாருடையது என்பதைத் தெரிவிக்காமல் மௌனம் காப்பதால், போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள். அவர், சில சமயங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல செயல்படுவதால், போலீஸார் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

அதனால், குழந்தை கடத்தலில் பிடிபட்ட முருகேசனுக்கு உண்மையிலேயே மனநலப் பிரச்னை இருக்கிறதா அல்லது போலீஸாரைத் திசைதிருப்பும் நோக்கத்தில் அப்படிச் செயல்படுகிறாரா என்பதைக் கண்டறிய, மனநல மருத்துவரிடம் அழைத்துச்சென்று சோதனை நடத்த உள்ளனர். அதன் பின்னரே, இந்த விவகாரத்தில் முழு உண்மையும் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.