
அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் காவலரின் கர்ப்பப்பையை டாக்டர்கள் அகற்றிவிட்டனர். குழந்தை இறந்ததோடு, அனுமதியில்லாமல் கர்ப்பப்பையை டாக்டர்கள் அகற்றிவிட்டதால், கணவர் ஏற்க மறுத்துவிட்டார். மனவேதனையில், பெண் காவலர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் சுமதி. இவர், கடந்த ஆறு ஆண்டுகளாக ஊர் காவல்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இன்று, தனது பெற்றோருடன் கலெக்டர் அலுவலகம் வந்த சுமதி, தன்னுடன் கொண்டுவந்த மண்ணெண்ணெய்யைத் தன் உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், இச்செயலைக் கண்டு உடனே சுமதியைத் தடுத்தனர். பின்னர், சுமதி கைதுசெய்யப்பட்டார். அவருடன் பேசியபோது, “கடந்த பிப்ரவரி 5-ம் தேதி, பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தேன். குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தேன்.
பின்னர், பிரசவத்தின்போது எனது குழந்தை இறந்துவிட்டதாகவும், கர்ப்பப்பையை நீக்கிவிட்டதாகவும் மருத்துவர்கள் சொன்னார்கள். எனது அனுமதியோ என் கணவரின் அனுமதியோ இல்லாமல், என் கர்ப்பப்பையை நீக்கியது தொடர்பாக புகார்செய்தேன். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினேன். எந்தப் பலனும் இல்லை. குழந்தை இறந்தது மட்டுமல்லாமல், கர்ப்பப்பையும் இல்லாததால், என் கணவர் முத்துக்கிருஷ்ணன் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். தவறுசெய்த மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச்சொன்னால், பணம் தருகிறேன் என்கிறார்கள். என் குழந்தையும், வாழ்க்கையும் போன பிறகு பணம் எதற்கு?” என்று கண்ணீரோடு பேசினார் சுமதி.






