உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவானவர்களின் பெயர் விபரங்கள் வெளியானது!

புதிதாக உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவானவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அச்சக திணைக்களம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இந்த வர்த்தமானி கடந்த வாரமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், சீராக்கல் பணிகள் நிமித்தம் தாமதிக்கப்பட்டிருந்தது.

கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது. அவற்றில் 24 மாநகரசபைகளும், 41 நகர சபைகளும் 275 பிரதேச சபைகளும் அடங்குகின்றன.

இவற்றுக்காக 8,325 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள நிலையில், அவர்களில் 5,061 பேர் வட்டார அடிப்படையிலும், 3264 பேர் விகிதார அடிப்படையிலும் தெரிவாகியுள்ளனர்.

தற்பொழுது வர்த்தமானி வெளியாகியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து கட்சிகளினதும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் அடுத்தடுத்த தினங்களில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.