விடுதலைக்காக சிந்திய ஏழையின் கண்ணீரும் செங்குருதியும் யாவரையும் அழிக்கும்!

உட்கட்சி சனநாயகத்திற்கு சாவுமணி அடித்து விட்டு அரசியல் அறத்திற்கு மரண தண்டணை கெடுத்து விட்டு கண்ணாடிக் கூண்டில் இருந்து கல்லெறிய வேண்டாம் என சனநாயக தமிழரசுக்கட்சியின் செயலாளர் வி.ஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருக்கு இன்று அனுப்பி வைத்த கடிதத்திலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

கட்சியின் சனநாயக விரோதங்கள் பற்றி பொது மக்களும் அரிய வாய்ப்பு ஏற்படுத்தியமைக்கு உங்கள் ஆதாயச் சூதாடிகளுக்கு மீண்டும் அக மகிழ்ந்த நன்றிகள்.

கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகி விட்ட என்னை எப்படி நீக்கலாம். இது உட்ச பட்ச கோமாளித்தனம் 22.07.2017 அன்றிலிருந்து கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து சனநாயகம் இல்லாத கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பி விட்டு தங்களுக்கும் தங்கள் நிர்வாக செயலாளருக்கும் தொலைபேசியில் கூறியிருந்தேன்.

நான் ஒன்றும் பதவி சுக போகத்திற்காக பின் கதவால் வந்த வழிப்போக்கன் இல்லை. 2009ம் ஆண்டு நடுநிசியில் எல்லோரும் அச்சப்பட்டு அடைபட்டு கிடந்த காலத்தில் துணிந்து கட்சியில் சேர்ந்த இரண்டாவது தமிழரசுக் கட்சியின் முதலாவது இளைஞன்.

பலரது வெறுப்புக்கு மத்தியில் இரண்டாவது தமிழரசுக் கட்சியியை மன்னாருக்கு கொண்டு வந்தவனும் அடியேனே.

வட கிழக்கு முழுக்க இளைஞர் அணிகளை உருவாக்கி எனது சொந்த செலவில் மாதாந்தம் சென்று அவர்களை இயக்கியவன்.

கட்சி மாநாட்டை விட பெரிய அளவில் இளைஞர் அணி மாநாட்டை நடத்திக் காட்டியவன். 2010ஆம் ஆண்டில் இருந்து மத்திய குழுவிலும் ஏனைய கூட்டங்களிலும் உட்கட்சி சனநாயகம் சீர்திருத்தம் பற்றி பேசிவந்துள்ளேன்.

இப்போது உள்ள பலருக்கு விடுதலை அரசியலுக்கு விளக்கம் தெரியாமல் பதவி சுகபோகத்திற்காக வழிப்போக்கர்களாக வந்துள்ளவர்களே அதிகம்.

‘அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும் என்கிறது’ சிலப்பதிகாரம் ஆனால் அறத்தையே அடியோடு அழித்தவர்கள் நீங்கள் வலி சுமந்த மக்களை மந்தைகள் என நினைக்காதீர்கள்.

கட்சிக் கட்டுப்பாடு ஒழுக்கம், கட்சி யாப்பு, உப விதிகள் பற்றி பேசுவதற்கு தமிழரசுக்கட்சிக்கு அருகதை இல்லை.

தங்களுக்கும் எந்த தார்மீகமும் இல்லை. ஒரு கட்சிக் கூட்டத்தையாவது ஒழுங்கு முறையாக நடத்தினீர்களா? கட்சிப் பதவி தெரிவுகள் யாப்பின் படி நடைபெற்றதா?

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடை முறைப்படுத்தப்பட்டதா? இது பற்றி எத்தனை மத்திய குழுவில் நான் கேள்வி எழுப்பியுள்ளேன். 10.10.2014 தங்களுக்கு நீண்ட கடிதம் எழுதியிருந்தேன். ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா? கட்சியின் மத்திய குழுவின் மொத்த அங்கத்தவர் 50 என விதி 08இன் 4 வது பிரிவு சொல்கிறது.

யாப்பை மீறி சட்டவிரோதமாக நீங்கள் மத்திய குழு கூட்டத்திற்கு பலரை அழைப்பது உங்கள் அறமா?

மத்திய குழு உறுப்பினரை தெரிவு செய்யும் மூன்று முறைமைக்குள்ளாலும் தெரிவு செய்யப்படாத திரு. சம்மந்தன் எப்படி மத்திய குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் எப்படி அரசியல் குழுவிற்கு தலைமை தாங்க முடியும்? யார் யாப்பை மீறியது? எவரை ஏமாற்றுகிறீர்கள்.

கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் ஒருவர் என விதி 7ன் முதலாவது பிரிவு சொல்கிறது. நீங்கள் இருவரை நியமித்து வைத்திருக்கின்றீர்கள் இது உங்கள் அறமா? ஒரு துணைப் பொதுச் செயலாளரே இருக்கவேண்டுமென விதி 07ன் 4வது பிரிவு சொல்கின்றது ஆனால் இருவரை நியமித்துள்ளீர்கள்.

இதுவும் உங்கள் அறமா? 6 துணைச்செயலாளர்கள்தான் இருக்கலாம் என விதி 5 கூறுகின்றது. ஆனால் நீங்கள் 16 பேரை நியமித்துள்ளீர்கள்.

இதுவும் நீங்கள் செய்த அறமா? கட்சியின் யாப்பை மீறீ தெரிவுகள் இடம்பெறக்கூடாது என நான் மத்திய குழுவில் தீர்மானம் கொண்டு வந்தேன் செயற்படுத்தினீர்களா?

மன்னார், முல்லைத்தீவு, வட்டுக்கோட்டை, தொகுதி ஆகியவற்றில் இருந்து 2014ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் மாநாட்டிற்கு தீர்மானம் கொண்டு வந்தோம் யாப்பின்படி தெரிவு கட்சி மறு சீரமைப்பு காமராஜர் திட்டம் அமைப்பு மாற்றம் (சிஸ்ர மாற்றம்) நீங்கள் பொதுக்குழுவில் அதை வாசிக்கவே இல்லை பேராசிரியர் சிற்றம்பலம் இரண்டுமுறை அந்தக்கூட்டத்திலே கேள்வி எழுப்பியும் நீங்கள் பதில் சொல்லவே இல்லை.

2012 மட்டக்களப்பு மாநாட்டில் பொதுக்குழு தெரிவு முடிந்த பின் நீங்கள் தான்தோன்றித்தனமாக கட்சியின் யாப்பை மீறி சீ.வி.கே. சிவஞானத்திற்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கினீர்கள்.

இதனால் முரண்பட்டு கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியின் பொருளாளருமாகிய எஸ்.ரி.தியாகராஜா தனது பதவியை இப்படியான கட்சியில் வகிக்க விரும்பவில்லை எனக்கூறி கட்சியைவிட்டு விலகினார். இதுவும் அறமா?

எம்முடன் ஊடக சந்திப்பு நடத்திய கட்சியின் மூத்த உறுப்பினர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு நடவடிக்கை எடுத்தீர்களா? முல்லைத்தீவு ஈசனை வேண்டு மென்றே நீக்கினீர்கள்.

அப்படியென்றால் தற்போது ஆயிரக்கணக்கானவர்களை நிறுத்தவேண்டும் அல்லவா? யானையிலும் கையிலும் சூரியனிலும் சைக்கிளிலும் அங்கத்தவர்கள் ஆகிவிட்டார்களே திரு. அருந்தபாலனை அசைத்துப் பார்த்தீர்கள் முடியவில்லையே இரண்டு வருடம் இயங்கும் அங்கத்தவராக இல்லாத ஒருவர் மத்திய குழு உறுப்பினர் ஆக முடியாது ஆனால் 2014ம் ஆண்டு மாநாட்டில் மாகாணசபை உறுப்பினர் திரு. சயந்தன் அவர்கள் அப்போது கட்சியின் உறுப்பினர் கூட இல்லை என அங்கத்துவத்திற்கு பொறுப்பாக உள்ள நிர்வாக செயலாளரால் கூறப்பட்டது.

அதையும் மீறி மத்திய குழு உறுப்பினர் ஆக்கினீர்களே இதுவும் கட்சி ஒழுக்கமா? யாப்பில் இல்லாத பதவி எனக்கு வேண்டாம் மகிந்தவின் அமைச்சரவையா என உங்களின் தற்போதைய சிரேஸ்ட உப தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கட்சியின் 2014ம் ஆண்டு மாநாட்டில் பகிரங்கமாக கூறியதை மறந்து விட்டிர்களா?

கட்சியின் மூத்த உறுப்பினர்களையே அரசியல் உயர்பீடத்தில் நியமிக்க வேண்டும் என யாப்பு சொல்கின்றது ஆனால் தேர்தல் அரசியலுக்கு வந்த மாகாணசபை உறுப்பினர்களான திரு.சத்தியலிங்கம், திரு. குருகுலராசா இருவரையும் நியமித்தீர்களே இதுவும் அறமா?

கட்சியின் மூத்த உறுப்பினரும் மூத்த பேராசிரியருமாகிய சி.க.சிற்றம்பலத்திற்கு இரண்டு முறை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தருவதாக கூறி ஏமாற்றினீர்களே இதுவும் அறமா?

கட்சிக்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக தன் வாழ்நாளை அர்ப்பணித்து தனது வீட்டையே பல நெருக்கடிக்கு மத்தியிலும் கட்சி அலுவலகமாக பயன்படுத்தும் திரு. குலநாயகத்திற்கு குறைந்த பட்சம் தவிசாளர் பதவி கூட வழங்க முன்வரவில்லையே ஏமாற்றினீர்களே இது எந்தவித அறம்.

உங்கள் சகோதரியின் முறையற்ற காணிக்கு ஒத்துளைக்கவில்லையென்று உங்களுடன் பல இக்கட்டான சூழ்நிலையில் கூட இருந்த திரு. கௌரிகாந்தனை வேணுமென்று நிறுத்தினீர்களே ஆனால் நீதிமன்றால் தோற்றுப்போனீர்களே.

இதுவும் உங்கள் அரசியல் அறமா? 14.07.2013 நடைபெற்ற மத்திய குழுவில் சர்வதிகாரமாக திரு. சம்பந்தன் அவர்கள், திரு. விக்னேஸ்வரனை தான் முதல்வர் ஆக்குவேன் என கொண்டுவந்தீர்கள். தற்போது முறையற்று சனநாயக படுகொலை செய்து வெளியேற்ற முனைகிறீர்களே இது எந்த வகையில் நியாயம்?

ஆகவே நாம் உண்மை பேசியது தான் குற்றமா? நியாயம் கேட்டது தவறா? இன்னும் அதிகம் கூறலாம் பக்கங்கள் அதிகரித்து விடும் வரலாறு எல்லாப்பக்கங்களையும் பதிவு செய்யும் என்பதை நீங்கள் மறந்து போனது தான் வேதனையே உங்கள் கடந்தகால அறமும் அறிவோம் நத்தைக்குப் பயந்து மெத்தைக்குள் ஒழிபவர்கள் நாம் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியம் எனும் உயரிய கொள்கைக்காக விடுதலை அரசியல் பேசவந்தவன் வெறுமனே அரசியலில் பதவி அனுபவிப்பது தான் எனது இலக்கு என்றால் ஆறும் மூன்றும் ஒன்பது ஐயா சொன்னால் பன்னிரண்டு என நேர்த்தியாக வேசமிட்டு நடித்து பதவி அனுபவித்து இருக்க முடியும்.

என்னால் அடிப்படையில் நான் ஒரு இலக்கியவாதி எழுத்தாளன் என்பதால் நடிக்கவும் தெரியும் நகைக்கவும் தெரியும் கொள்கை அரசியல் வேறு இலக்கியம் வேறு என்பதில் நான் எப்போதும் மிகத் தெளிவானவன். ஏனெனில் நீண்ட தமிழ்த் தேசிய பின்னணி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவன் அதனால் தான் தனித்து நின்று உங்களோடு போராடுகின்றேன். உங்கள் பிற்போக்குத்தனங்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவேன்.

முறையற்ற மத்திய குழுவில் இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லுபடியற்றதாக்க முடியும் நீதிமன்றுக்கு சென்றால் அகவே எல்லோரும் முட்டாள்கள் அல்ல என்பதை நீங்கள் புரிய வேண்டும்.

2015ம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதி தேர்தலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க கூடாது என்பதை நாம் பல கூட்டத்தில் வலியுறுத்தினேன் 17.10.2014 இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற யாழ் மாவட்ட கட்சி மாநாட்டிலும் 28.10.2014 திருகோணமலையில் நடைபெற்ற மத்திய செயற்குழுவிலும் வலியுறுத்தினேன்.

நிறைவாக 14.12.2014 வவுனியாவில் நடைபெற்ற மத்திய குழுகூட்டத்தில் ஆதரவு வழங்கும் விடயம் தொடர்பாக நீண்டநேரம் விவாதித்தேன் சனநாயகத்திற்கு செவிசாய்த்தீர்களா? சர்வதிகாரமாகவே நடந்துகொண்டிர்கள். பின்னர் கொழும்பில் கூட்டமைப்பு கூட்டத்தில் நிபந்தனை அற்ற ஆதரவு வழங்குவதாக தீர்மானித்தீர்கள் .

இது தவறு என உங்களுக்கும் திரு சம்மந்தன் அவர்களுக்கும் தொலைபேசி மூலம் கூறினேன் எம்மிடம் திட்டம் இருக்கிறது நாம் சாதிப்போம் என சர்வதிகாரமாக பதில் சொன்னார் திரு. சம்பந்தன்.

என்னால் இதை ஏற்க முடியாது என கூறி என் கருத்தை மனச்சாட்சிப்படி ஊடகங்களுக்கு தெரிவிப்பேன் என உங்கள் இருவருக்கும் தெரிவித்தேன் அதற்கமைவாக 03.01.2015 அன்று யாழில் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தினோம் நானும் திருமதி. அனந்தி சசிதரன், மறவன் புலவு திரு. சச்சிதானந்தன் அவர்களும் இந்த ஊடக சந்திப்பை தற்போதும் இணையங்களிலும் பார்க்கலாம்.

நீங்கள் கொழும்பிடம் நலனையும் பெற்றுக்கொண்டு நிபந்தனையற்ற ஆதரவு விடுதலைக்கு போராடிய இனத்தை எந்த அடிப்படையும் இல்லாமல் கொழும்பிடம் விற்றுவிட்டிர்கள் பாவம் அப்பாவி தமிழ் மக்கள் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ்த் தேசியத்தை வலுவிளக்கச் செய்யும் வடகிழக்கில் சிங்களக்கட்சிகளை காலுண்ட செய்யும் தமிழ்த் தேசிய உணர்வு அற்றுப் போகும் ஐ.தே.க எம்மை கூறுபோடும்.

புலிகளையே பிரித்தவர்கள் இனப்படுகொலையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியாது சர்வதேச விசாரணை காணாமல் போகும் என்று பல விடயம் அன்றே தீர்க்கதரிசனமாக கூறியிருந்தோம். இன்று வடக்கில் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்பட்டதா நாம் சொன்னது எல்லாம் தற்போது நடைபெறுகிறது தானே இதில் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யது நீங்களா? நாங்களா?

யார் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும் அதுதான் தேர்தலில் வெளிப்படுத்தினார்கள் ஆகவே சகல தவறுகளுக்கும் பொறுப்பாளிகள் நீங்களே தொடர்ந்து உங்களுக்கு இறங்கு முகமே நீளும் வலி சுமக்காமல் வழிப்போக்கனாக வந்த திரு. சுமந்திரனுக்கு யாப்பை மீறி சர்வதிகாரம் கொடுத்தது யார்? சகல தவறுகளுக்கும் நீங்களே காரணம்.

தமிழின விடுதலைக்காக மரணித்த ஆன்மாக்கள் உங்களை மன்னிக்காது வடகிழக்கு இணைப்பு காணாமல் போனோர் விவகாரம் அரசியல் கைதிகள் விடுதலை நில விடுவிப்பு வாழ்வாதார முன்னேற்றம் மனித உரிமைகள் விவகாரம் இதில் ஏதாவது ஒன்றை சாதித்தீர்களா?

உங்கள் நிபந்தனையற்ற ஆதரவால் கேவலம் சிங்கள அரசாங்க அதிபர்களைக்கூட மாற்ற முடியவில்லை நீங்கள் மட்டும் பதவிகளும் சுபபோகங்களும் பெற்றுக்கொண்டிர்கள் இந்த ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு கிடைத்த விமோசனம் என்ன?

எனவே கட்சியின் யாப்புக்கு எதிராக இயங்கிய உங்கள் மேல்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் உங்களுக்கு யாருக்காவது முதுகெலும்பு இருந்தால் கொள்கைபற்றி மக்கள் மன்றத்தில் ஊடகங்களுக்கு முன் பகிரங்க விவாதம் நடத்துவோம் வாருங்கள்.

யார் அரசியல் ஆதாயச் சூதாடிகள் என்று நிருபிப்போம். உங்களைக்கண்டு எல்லாம் அச்சப்படுவதற்கு நாம் ஒன்றும் தொட்சாச்சினிங்கி அல்ல. நாங்கள் பிரபாகரனைப் பார்த்து வளந்தவர்கள் அறம் வெல்லும் விடுதலைக்காக சிந்திய ஏழையின் கண்ணீரும் செங்குருதியும் உங்கள் யாவரையும் அழிக்கும் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.