பள்ளி ஆசிரியை மிரட்டிய 7ஆம் வகுப்பு மாணவன்!

வகுப்பு ஆசிரியையையும், அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாக இ-மெயிலில் மிரட்டல் விடுத்த 7 ஆம் வகுப்பு மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவனுக்கு உளவியல் ரீதியாகவும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

அரியனா மாநிலத்தில் உள்ள குருகிராம் நகரத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவன், தனது வகுப்பாசிரியருக்கு, இ-மெயில் வழியாக மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளான். எதற்காக இந்த மிரட்டல் விடுத்தான் என்பது தெரியவில்லை. ஆனால், அவனது மிரட்டல், அவனை பள்ளியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யவைத்துள்ளது.

அந்த மிரட்டலில், ஆசிரியையும் அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாக அந்த மாணவன் மிரட்டியுள்ளான்.

ஆசிரியையின் மகளும் அதே வகுப்பில் படித்து வருகிறார். மாணவனின் இந்த மிரட்டல் குறித்து ஆசிரியர், போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அந்த மாணவனை தற்காலிகாக இடைநீக்கம் செய்ததுடன், மாணவனுக்கு உளவியல் தொடர்பாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட ஆசிரியரின் மற்றும் அவரது மகளின் பெயர் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதால், அந்த மாணவரின் பெயரையும் பள்ளியின் பெயரையும் வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

இந்த பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 8 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், உல்லாசமாக இருக்க ஆசிரியைக்கு இ-மெயில் மூலம் அழைத்த சம்பவம் நடந்துள்ளது.