அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பார்க்லேண்டில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளியில், கடந்த 14-ம் தேதி நிகோலஸ் கிரஸ் என்ற இளைஞர், AR-15 ரக துப்பாக்கியுடன் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில், மாணவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்தப் பள்ளியில் தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி விஸ்வநாதன் என்ற ஆசிரியை பணிபுரிந்துவந்தார். கணக்கு ஆசிரியையான இவர், இரண்டாம் வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த போதுதான் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

பள்ளியில் அலாரமும் தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட சாந்தி, சுதாரித்துக் கொண்டார். உடனடியாக வகுப்பின் கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்தார். வகுப்பில் இருந்த குழந்தைகளை டெஸ்க் மற்றும் பெஞ்சுகளுக்கு அடியே பதுங்கச்செய்தார். இந்த வகுப்பு வழியாகத்தான் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுக்கொண்டே நிகோலஸ் சென்றுள்ளார். அந்தச் சமயத்தில் கதவு, ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருந்ததால், கொலையாளியின் கண்களுக்குக் குழந்தைகள் தென்படவில்லை.
தொடர்ந்து, போலீஸார் வந்து வகுப்பின் கதவைத் திறக்குமாறு தட்டியுள்ளனர். கொலையாளிதான் போலீஸ்போல, கதவைத் தட்டுவதாக நினைத்து சாந்தி கதவைத் திறக்க மறுத்துள்ளார். ‘ஒன்று, கதவை உடைத்து உள்ளே வா… அல்லது சாவியைக் கொண்டு திறந்து வா… நான் கதவைத் திறக்க மாட்டேன்’ என்று போலீஸாரிடம் சாந்தி கூறியுள்ளார். போலீஸார் ஜன்னல்களை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, குழந்தைகளை வெளியேற்றினர்.

சாந்தியின் வகுப்பில் படித்துவரும் பிரெயின் என்ற மாணவனின் தாயார் டான் ஜெர்போ, ‘ஆசிரியை சாந்தியின் புத்திசாலித்தனமான செயல்பாட்டால், என் மகன் உள்பட ஏராளமான குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அதே வேளையில், இறந்துபோன குழந்தைகளை நினைத்து மனம் வருத்தமும் வேதனையும் அடைகிறோம்’ என்றார்.
இந்தத் தாக்குதலில், குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஸ்காட் பீகல் என்ற ஆசிரியர் கொல்லப்பட்டார். பார்க்லேண்டில் மட்டும் 22,600 இந்திய மக்கள் வசித்துவருகின்றனர். இந்தத் தாக்குதலில் இந்தியக் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகவில்லை.






