காணாமல் போனோரின் காதலை இழந்து தவிக்கும் உறவுகள்!!

காதலர் தினமான நேற்று தமது அன்புக்குரியவர்களுடன் காதலை அனைவரும் பகிர்ந்த சந்தர்ப்பத்தில், தமது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் காணாமல் போனோரின் உறவினர்கள் வித்தியாசமான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

காணாமற்போனோரின் குடும்ப அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு, கொழும்பில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது. ‘காணாமல் போன காதல்’ என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நாட்டின் பெரும்பாலானவர்கள் காதலர் தினத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, இம்மக்களோ கண்ணீருடன் தமது உணர்வை வெளிப்படுத்தினர்.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் போன தமது உறவினர்களின் ஒளிப்படங்களை தாங்கியவாறு உறவினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதோடு, அவற்றை பிரதிபலிக்கும் உணர்வுபூர்வமான சிலைகளும் இந்நிகழ்வில் வைக்கப்பட்டிருந்தன.

யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் நிறைவடைந்த போதும், காணாமல் போனோர் பிரச்சினைக்கு எவ்வித நடவடிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் இதற்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அதற்கான போதிய நகர்வுகள் முன்னெடுக்கப்படவில்லையென்பது காணாமல் போனோரின் உறவினர்களது ஆதங்கமாக உள்ளது. காணாமல் போன தமது உறவினர்களுக்காக வடக்கு கிழக்கில் சுமார் ஒரு வருடத்தைக் கடந்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.