அமெரிக்கா செல்லும் 22 அகதிகளுக்கு கிடைக்கும் அதிஷ்டம்!

அமெரிக்கா – அவுஸ்திரேலியா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், நவுரு தடுப்பு முகாமிலிருந்து 22 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின் தேர்வு செய்யப்பட்ட இவர்கள் நேற்று நவுருவிலிருந்து பிஜி வழியாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரை சென்றடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்படும் இந்த அகதிகளுக்கு முதல் 3 மாதம் அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்படும்.

ஓராண்டுக்குப் பின் அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்குவதற்கான உரிமையைப் பெறுவார்கள்.

5 ஆண்டுகள் நிறைவில் அவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிய வருகின்றது.

இந்த அகதிகள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என Refugee Action Coalition அமைப்பைச் சேர்ந்த ஐன் ரிண்டோல் தெரிவித்துள்ளர்.

இதில் ஒரு ரோஹிங்கியா குடும்பத்தைத் தவிர மற்ற அனைவரும் ஆண்களாவர்.

கடந்த நவம்பர் 2016இல் கையெழுத்தான அவுஸ்திரேலியா – அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தத்தின் படி அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அதே சமயம் மத்திய அமெரிக்க அகதிகளை அவுஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் சுமார் 2000 அகதிகள் நவுரு மற்றும் மனுஸ்தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சொந்த நாட்டில் உள்ள போர் சூழல் காரணமாக படகு வழியே அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தவர்களாவர்.

இந்த அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், இதுவரை மனுஸ் மற்றும் நவுரு தடுப்பு முகாமிலிருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.