தனது தேர்தல் தொகுதியின் சிங்கள வாக்குகளாலேயே தான் வெற்றி பெற்றுள்ளதாக கொழும்பின் முதல் பெண் மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலின் போது கொழும்பு மாநகர சபையில் ஐ.தே.க பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சி சார்பாக ரோசி சேனாநாயக்க மேயர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் வெற்றி மற்றும் எதிர்காலப் பணிகள் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வழங்கிய அவர்,
தனது தேர்தல் தொகுதியின் பெருவாரியான சிங்கள வாக்குகளே தன் வெற்றியைத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அனைத்து இன மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து செயலாற்றப் போவதாக தெரிவித்திருக்கும் ரோசி சேனாநாயக்க, பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்காக எந்தவொரு சவாலுக்கும் முகம் கொடுக்கத் தயார் என்றும் வலியுறுத்தியுள்ளார்.