பிரபல மலையாள நடிகை அமலா பால் போன வருடம் 1 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கினார். அதை அவர் போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. விசாரணை நடத்திய எர்ணாகுளம் போக்குவரத்து துறை அதிகாரிகள், கார் பதிவின் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். ஆனால் அவரது வழக்கறிஞர் ஆஜராகி ஆவணங்களை ஒப்படைத்தார். அந்த ஆவணங்களில் புதுச்சேரியில் குடியிருப்பதாக வழங்கிய ஆவணம் மட்டும் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அமலாபாலே நேரில் வந்து விளக்க வேண்டும் என்று அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பினர். ஆனால் அதை மறுத்த அமலாபால், கைது செய்யபடமால் இருப்பதற்காக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது: நான் இந்தியா முழுவதும் படப்பிடிப்பிற்காக சுற்றி திரிகிறேன். செல்லும் இடம் எல்லாம் ஹோட்டலில் இருக்க முடியாது என்பதற்காக வாடகைக்கு வீடு எடுத்து தங்குவது வழக்கம். அப்படி ஒரு வீடு தான் அந்த புதுச்சேரி வீடு.
மேலும், சென்னை, பெங்களூரு மற்றும் புதுச்சேரி செல்வதற்காக தான் அந்த காரை வாங்கினேன். அதற்காக என்னால் கேரளாவில் வரி கட்ட முடியாது. அதனால் எனக்கு முன் ஜாமீன் வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு கடந்த 9 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், முதலில் அமலாபால் இந்த வழக்கை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் முன்பு ஜனவரி 15ந் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, மனு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.
இதற்காக அமலா பால் ஜனவரி 15ந் தேதி திருவனந்தபுரம் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் முன் ஆஜரானார். சுமார் ஒரு மணிநேரம் காவல் துறை அதிகாரிகள் விசாரித்தார்கள், அப்போதும் அமலா பால் புதுச்சேரியில் உள்ள எனது வாடகை வீட்டின் முகவரியில் தான் நான் பதிவுசெய்தேன். அதற்கான ஆவணங்கள் இதுவே என்று புதுச்சேரி வாடகை வீட்டின் ஆவணங்களை ஒப்படைத்தார். அமலாபாலின் ஆவணங்களில் அதிகாரிகள் திருப்தியடையவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மீண்டும் வழக்கு தொடரும் என்று கூறுகிறார்கள்.