தனது சொகுசு காரை புதுச்சேரியில் பதிவுசெய்து வரி ஏய்ப்புசெய்த வழக்கில், நடிகை அமலா பால் கேரள க்ரைம் பிராஞ்ச் முன்பு சரணடைந்தார்.
தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர், ஒரு கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்தக் காரை கேரளாவில் பதிவுசெய்ய ரூ.20 லட்சம் வரி கட்ட வேண்டும். ஆனால், காரை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பதிவுசெய்தால் குறைந்த வரி கட்டினால் போதும். அமலா பால், தன் காரை ரூ.1.75 ஆயிரம் செலுத்தி புதுச்சேரியில் வேறு ஒருவர் பெயரில் பதிவுசெய்தார். இதை கேரள வரித்துறை கண்டறிந்தது.
இதையடுத்து, அமலா பால் மீது க்ரைம் பிராஞ்ச் 420, 468, 471 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை, க்ரைம் பிராஞ்ச் ஐ.ஜி., எஸ்.இந்திரஜித் விசாரித்துவருகிறார். இந்நிலையில், அமலா பால் இன்று க்ரைம் பிராஞ்ச் முன்பு சரணடைந்தார். அங்கு, ஏராளமான பத்திரிகையாளர்களும் புகைப்படக்காரர்களும் குவிந்திருந்தனர். அவர்களைச் சந்திக்காமல், அமலா பால் உள்ளே சென்று விட்டார். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் முன்ஜாமீன் வைத்திருந்தார்.
கேரளாவில், இந்த வகையில் சுமார் 5,000 பேர் சொகுசு காரை வேறொருவர் பெயரில் பதிவுசெய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடிகர் பகத் பாஸில் (நடிகை நஸ்ரியாவின் கணவர்), நடிகரும் எம்.பி-யுமான சுரேஷ் கோபி ஆகியோர் முக்கியமானவர்கள் . அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டால், இவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.