சோபித தேரரின் பெயரை ராஜகிரிய மேம்பாலத்துக்கு சூட்டுமாறு உத்தரவு..

ராஜகிரிய மேம்பாலத்துக்கு வண. மாதுளுவாவே சோபித தேரரின் பெயரைச் சூட்டுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்றாவது ஆண்டு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இரண்டு முக்கியமான திட்டங்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் திறந்து வைக்கப்பட்டன.

கொழும்பு நகரின் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கட்டப்பட்ட ராஜகிரிய மேம்பால திறப்பு விழாவும், மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தில் இருந்து நீரைத் திறந்து விடும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றன.

Rajagiriya Flyover

ராஜகிரிய மேம்பாலத் திறப்பு விழாவில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர், இந்த மேம்பாலத்துக்கு மறைந்த வண. மாதுளுவாவே சோபித தேரரின் பெயரைச் சூட்டுமாறு அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் மாதுளுவாவே சோபித தேரர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

அதேவேளை, நேற்று சிறிலங்கா அதிபரால் திறந்து வைக்கப்பட்ட ராஜகிரிய மேம்பாலம் மற்றும் மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் என்பன, மகிந்த சிந்தனைக்கு அமைய, தனது ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவையே என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உரிமை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.