ரஞ்சி டிராபியின் இறுதி போட்டியில் கேப்டனான இளம் வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.
இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த முதல்தர போட்டியான ரஞ்சி டிராபியின் இறுதிப் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி – விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டெல்லி அணியின் கேப்டனாக இசாந்த் சர்மா இருந்தார். தற்போது தென்ஆப்பிரிக்கா தொடருக்காக இசாந்த் சர்மா தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளார்.
இதனால் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் செயல்பட்டு வருகிறார். இந்தூரில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் கேப்டனாக செயல்பட்டதன் மூலம் ரிஷப் பந்த் இந்த சாதனைப் படைத்துள்ளார்.
இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 1994-95-ம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் 21 வயது 337 நாட்களில் கேப்டனாக இருந்து சாதனைப் படைத்திருந்தார். இன்று ரிஷப் பந்த் 20 வயது 86 நாட்களில் கேப்டனாக இருந்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியை போன்றே இவரும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்பதால்,விரைவில் இந்திய அணியிலும் இவர் ஜொலிப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.