குஜராத்: பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரத்தில் ‘பாகிஸ்தான்’ அடிபடுவது ஏன்?

ஞாயிற்றுக்கிழமையன்று குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, எதிர்கட்சியான காங்கிரஸ் எல்லை தாண்டிய நாட்டில் இருந்து உதவிபெறுவதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

160807142107_indian_prime_minister_narendra_modi_640x360_pib_nocreditபனாஸ்கந்தாவின் பாலன்புரில் தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோதி, பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் இயக்குனர் ஜென்ரல் சர்தார் அர்ஷத் ரஃபீக், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமத் படேலை குஜராத் முதலமைச்சராக்க விரும்புவதாக அதிரடியாக குறிப்பிட்டார்.

தேர்தல் பிரசாரத்தில் பாகிஸ்தானின் பெயரை பா.ஜ.க பயன்படுத்துவது இதுவொன்றும் முதல்முறை அல்ல.

முன்னதாக, கடந்த காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் பாகிஸ்தானின் பெயரை பலமுறை பா.ஜ.க தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க. தலைவர்கள் பாகிஸ்தானின் பெயரை பயன்படுத்திய விவரங்களை தெரிந்து கொள்வோம்.

  • 2014 தேர்தலின்போது, ஜார்கண்ட் மாநிலம் தேவ்கட்டில் பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ.க தலைவர் கிரிராஜ் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோதியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும் என்று அதிரடியாக கூறினார். 2014 ஏப்ரல் 19 ஆம் தேதியன்று அவர் ஆற்றிய உரையில், “மோதியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானை எதிர்பார்க்கிறார்கள், அவர்களின் இடம் பாகிஸ்தானில் தான், இந்தியாவில் அல்ல” என்று கூறினார்.
  • 2015 பிஹார் சட்டமன்ற தேர்தலின்போது அமித் ஷா பாகிஸ்தானின் பெயரை பயன்படுத்தினார். 2015 அக்டோபர் 29ஆம் தேதி ரக்செளலில் பேரணி ஒன்றில் கலந்துக்கொண்ட அவர், “தப்பித்தவறியும் பாரதிய ஜனதா கட்சி பிஹாரில் தோற்றுப்போனால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள், பாகிஸ்தான் பட்டாசு வெடித்து மகிழவேண்டும் என்று விரும்புகிறீர்களா..?” என்று உணர்ச்சிவசமாக கேள்விக்கணை தொடுத்தார்.
  • 2017 பிப்ரவரி நான்காம் தேதியன்று மீரட்டில் தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் (சர்ஜிகல் ஸ்ட்ரைக்) பற்றி சுட்டிக்காட்டினார். தங்கள் ஆட்சி, பாகிஸ்தானுக்கும் நுழைந்து, கணக்கை நேர் செய்துவிட்டு வந்ததாக குறிப்பிட்டார்.
  • உத்தரகண்ட் சட்டசபை தேர்தலின்போது, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த துல்லிய தாக்குதல் பற்றி குறிப்பிட்டார். 2017 பிப்ரவரி 6-ஆம் தேதியன்று ஹரித்வாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் என்று கூறிய அவர், இப்போது நடைபெறவேண்டிய விவாதம், பாகிஸ்தானும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக வேண்டுமா என்பதாக இருக்கவேண்டும் என்று கூறினார்.
  • 2017 பிப்ரவரி 24-ஆம் தேதி கோண்டாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, கான்பூர் ரயில் விபத்திற்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றம்சாட்டினார்.
  • 2017 நவம்பர் 27ஆம் தேதியன்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “பாகிஸ்தான் நீதிமன்றம் அந்நாட்டு தீவிரவாதி ஒருவரை விடுதலை செய்தால், அதை காங்கிரஸ் கொண்டாடுகிறது, எனக்கு அது அதிசயமாக இல்லை. ஏனெனில், இதே காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தான் மீதான இந்தியாவின் துல்லிய தாக்குதல்மீது நம்பிக்கை வைக்கவில்லை. அது மட்டுமா? இதே காங்கிரஸ் கட்சியினர்தான் சீனாவின் தூதரை கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்துகிறார்கள்” என்று கூறினார்.
  • 2017 டிசம்பர் பத்தாம் தேதியன்று பனாஸ்கந்தாவில் பாலன்புர் தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “ஒருபுறம் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் இயக்குனர் ஜென்ரல் சர்தார் அர்ஷத் ரஃபீக் குஜராத் தேர்தலில் தலையிடுகிறார், மறுபுறம் பாகிஸ்தானை சேர்ந்தவர்களின் சந்திப்பு மணிசங்கர் ஐயரின் வீட்டில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு உடனே, காங்கிரஸ் தலைவர்கள், குஜராத் மக்கள், இங்குள்ள பிற்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் மோதியை மரியாதை குறைவாக பேசுகிறார்கள், இதுபற்றி சந்தேகம் கொள்ளவேண்டாம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?”என்று வினவினார்.

இப்படி பாகிஸ்தானின் பெயர் பல தேர்தல் பிரசாரங்களில் அடிபடும் நிலையில் பிரதமரின் அண்மை தேர்தல் பிரசாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டிவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Capturesefsed“தேர்தலில் தோல்வி ஏற்படுமோ என்ற அச்சத்தால், அரசியல் லாபத்திற்காக கூறப்படும் பொய்களை கண்டு வேதனையடைகிறேன். அதிலும் பிரதமர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இவ்வாறு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குவது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார்.

“காங்கிரஸ் கட்சியின் தேசப்பற்றைப் பற்றி நாங்கள் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை, அதுவும் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் சமரசம் செய்துகொண்ட ஒரு கட்சியிடம் இருந்து எங்களுக்கு சான்றிதழ் தேவையில்லை”

“உதாம்புர் மற்றும் குர்தாஸ்புரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு, பாகிஸ்தானிடம் இருந்து அழைப்பே இல்லாமல் அந்த நாட்டிற்குக் சென்று வந்தவர் அவர்தான் என்பதை பிரதமர் நரேந்திரமோதிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என மன்மோகன் சிங் ட்விட்டர் செய்தியில் தெரிவித்தார்.