குரங்குகளின் தோழன் இவன்…! ஒன்றரை வயது சிறுவனின் நேசம்

கர்நாடகாவைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன் குரங்குகளுடன் நட்பாகப் பழகி வருவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

BOY_03504

குரங்கில் இருந்துதான் மனிதன் தோன்றினான் என்கிறது விஞ்ஞானம். அதற்கு ஏற்ப குரங்குகள் மற்றும் மனிதர்களின் குணநலன்களில் சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆனால், இன்று சில நகரங்களில் குரங்குகளின் அதிகப்படியான நடமாட்டம் மனிதர்களுக்குத் தொல்லை தரக்கூடியதாகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. டெல்லியில் குரங்குகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அரசு எடுத்தது நினைவிருக்கலாம். அது ஒருபுறம் இருக்கட்டும். அன்றாடம் குரங்குகளுடன் விளையாடி மகிழும் கர்நாடகச் சிறுவனின் கதையைப் பார்க்கலாம்…

கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுவனின் விளையாட்டுத் தோழர்கள் குரங்குகள்தான். காலை 6 மணிக்கு குரங்குகள்தான் அவனை உறக்கம் எழுப்புகின்றனவாம். அவன் குரங்குகளுக்கு உணவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறான். அவற்றுடன் பொழுதைக் கழிக்கிறான்.  குரங்குக் கூட்டத்தின் நடுவே அவன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. புன்னகை ததும்ப அமர்ந்திருக்கிறான் அவன். அவனுடைய தாயார் கூறும்போது, “குரங்குகள் அவனிடம் நேசமாக விளையாடுகின்றன. குறும்புத்தனம் செய்தாலும் அவை அவனை பதிலுக்குத் தாக்குவதோ கடிப்பதோ இல்லை” என்றார்.