யார் இந்த அன்புச்செழியன்…….அதிர வைக்கும் பின்னணி!

தமிழ் சினிமா திரையுலகம் எத்தனையோ வில்லன்களை சந்தித்திருக்கிறது எல்லாரையும் வென்றிருக்கிறது. ஆனால் நிஜத்தில் தமிழ் சினிமாவை வச்சு செய்யும் வில்லன் என்றால் அது அன்பு என்று அழைக்கப்படும் அன்புச்செழியன் தான்.

இந்த மதுரைக்கார மச்சானின் பெயரைச் சொன்னாலே கோலிவுட்டில் நேற்று பிறந்த தயாரிப்பாளரின் குழந்தை கூட ஒரு கையால் தன் வாயையும், அடுத்த கையால் தன் அப்பா வாயையும் சேர்த்து மூடும். அந்தளவிற்கு பயம்.

அன்புச்செழியனிடம் கடனாக வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு வட்டிக்கு மேல் வட்டி கட்டி ஒரு கட்டத்தில் தனது உயிரையும் கட்டிவிட்டு தூக்கில் தொங்கும் சினிமா புள்ளிகளின் வரிசையில் நேற்று இணைந்திருக்கிறார் இயக்குனர் சசிக்குமாரின் அத்தை மகன் அசோக்குமார்.

இந்த அசோக்குமாராவது வெளியில் தெரியாத கேரக்டர். ஆனால் இந்திய சினிமாவால் போற்றப்படும் பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரனை அகால மரணமடைய வைத்தவர் இந்த அன்புதான்.

மதுரை மாவட்டத்தில் சாதாரண பைனான்சியராக இருந்தவர்தான் கடந்த 1990களின் இறுதியில் சினிமா பைனான்சியராக அவதாரமெடுத்தார்.

தனது கல்லா பெட்டியில் குவிந்து கிடந்த பணத்தை அள்ளி அள்ளி சினிமாக்காரர்களுக்கு வழங்கி அவர்கள் தரும் வட்டியை சாக்குப் பைகளில் நிரப்புவார் இந்த அன்பு.

பெயரில் மட்டும் தான் அன்பு… கொடுத்த கடனை சரியாக திருப்பி தராவிட்டால் அவர் அதை ட்ரீட் செய்யும் விதமே வேறு லெவலில் இருக்கும்.

அன்புவின் கடன் என்னும் வலையில் விழுந்து நொந்தது கோலிவுட் ஆண்கள் மட்டுமில்லையாம். பெண்களும்தானாம்.

அதிலும் குறிப்பாக நடிகை தேவயானி, ரம்பா ஆகியோர் அன்புவிடம் சிக்கி மீண்டது ஏதோ அவர்கள் ஒரு பிறவியில் செய்த புண்ணியம் என்றும் அவர்கள் பட்ட அவஸ்தையை எல்லாம் வெளியே சொல்ல முடியாத ரகங்கள் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

முதலில் அவர் வட்டியும், அசலும் கட்ட முடியாதவர்களின் சொத்துக்களை தூக்குவார் பின்னர் ஆளையே தூக்கிடுவார்.

திரையில் 100 பேரை ஒரே அடியில் அடித்து தூள் கிளப்பும் ஹீரோக்கள் தங்களுடைய சொந்த தயாரிப்புக்காக அன்புவிடம் கடன் வாங்கிவிட்டு பின்னர் அன்பு வீட்டு வராந்தாவில் அல்லக்கைகள் போல் நிற்பதெல்லாம் வழக்கமாக நடைபெறும் கூத்துதான்.

இவர் கோபுரம் பிலிம்ஸ் என்னும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி தன்னை தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.

அதோடு மட்டுமா இரு பெரும் திராவிட கட்சிகளின் மிக முக்கிய அதிகார மையங்களயும் தனது பாக்கெட்டில் வைத்திருந்தார் அன்பு.

திமுகவை பொறுத்தவரையில் மதுரை அண்ணனையும், அதிமுகவை பொறுத்தவரையில் சின்ன மேடத்தையும் அன்புக்கு மிக நெருக்கம் என்பார்கள்.

இந்த பயமே காவல்துறையினரையும், பிற துறையினரையும் அன்புவிடமிருந்து விலகி நிற்க வைத்தது.

அன்புவின் மீது அவ்வப்போது சில சினிமாக்காரர்களால் அநியாய வட்டி, ஆளைதூக்குவேன்னு மிரட்டுகிறார் எனும் புகார்கள் கொடுக்கப்படும்.

ஆனால் அவை அனைத்தும் வெளியவே வராமல் அப்படியே அமுக்கப்படும். சில சமயங்களில் கண் துடைப்புக்காக சில ரெய்டுகள் நடத்தப்பட்டு பின்பு அவையும் அப்படியே கடந்து போய்விடும்.

ஜி.வி.யின் சாவுக்கு காரணம் அன்புதான் என்பது அனைவராலும் வெளிப்படையாக பேசப்பட்டாலும் கூட அந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவில்லை.

ஆனால் ஒரு கட்டத்தில் சுந்தராடிராவல்ஸ் என்ற படத்தை தயாரித்த யுவஸ்ரீ கிரியேஷன்ஸின் உரிமையாளர் தங்கராசு கொடுத்த புகாரின் அடிப்படையில் சில வருடங்களுக்கு முன்னர் அன்பு கைதானார்.

அதனையடுத்து பின் அவர் எளிதாய் வெளியே வந்தார். அதன் பிறகும் கூட அவர் பட தயாரிப்பு, விநியோகம் என்று இறங்கினார்.

நடிகர் திலகத்தின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடித்த வெள்ளக்கார துரை படம் கூட அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் தயாரித்ததுதான்.

மிகவும் மோசமான தயாரிப்பாளர் என தெரிந்தும் கூட நடிகர் பிரபு தன்னுடைய மகனை அன்புவின் தயாரிப்பில் நடிக்க வைக்க தயங்கவில்லை என்றால் அந்த துறையில் அன்புவின் ஆளுமையை புரிந்து கொள்ளுங்கள்.

நடிகர் பிரபு மட்டுமல்ல இது போல் இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன.

தனது சகோதரர் மரணமடைந்ததற்கு எந்த ஒரு பழிவாங்கலும் இல்லாமல் வழக்கம்போல் அதிக இருட்டும், கொஞ்சம் வெளிச்சமும் கலந்த தன்னுடைய இயல்பு வாழ்க்கைக்குள் ஐக்கியமானார் மணிரத்னம்.

தற்போதோ சசிகுமார் தன்னுடைய உறவின் உயிரை அன்புவிடம் இழந்திருக்கிறார்.

மதுரைக்காரன் என்று சவடால் சவுண்டு விடும் சசியாவது நிஜத்தில் அன்புச்செழியனின் ஆட்டத்தை அடக்குவாரா? அல்லது அவரும் 2 நாள் அழுதுவிட்டு பின்னர் மீண்டும் தலையாட்டியபடி நடிக்க வந்துவிடுவாரா?
என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..