நீதிமன்றம் செல்லும் இ.தொ.கா!

ஹட்டன் மற்றும் தலவாக்கலை நகரசபைகளில் ஏற்பட்டுள்ள அநீதிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நீதிமன்ற உதவியை நாடவுள்ளதாக, அக் கட்சியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

arumugan-thondamanஹட்டன் கல்வி வலயத்தின் செனன் தமிழ் மகா வித்தியாலய புதிய கட்டிட திறப்பு மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,

45 வருட காலமாக ஹட்டன் நகரசபை பகுதிக்குள் வாக்காளர்களாக இருந்தவர்களில் அதிகமானோர், தற்போது பிரதேச சபைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தலவாக்கலை நகரசபை எல்லைப் பகுதியிலும் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்ட செயலா அல்லது தற்செயலானதா என தெரியவில்லை.

இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சட்ட உதவியை நாடவுள்ளது. மேலும் 1992ம் ஆண்டளவில் அமரர் சொமிய மூர்த்தி தொண்டமான் அவர்களினால் நுவரெலியா மாவட்டத்தை 12 பிரதேச சபைகளாக பிரிக்க எஸ்.பி.திசாநாயக்க, ரேணுகா ஹேரத், சீ.பி.ரத்நாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது ரேணுகாவின் பேச்சில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அந்த விடயத்தில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டது. இப்போது 6 பிரதேச சபைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அப்போதே பேசினோம், என்று நாங்கள் கூறினால் உரிமை கோருவதாக தெரிவிக்கின்றனர் என்றார்.